Published : 09 Aug 2014 10:44 AM
Last Updated : 09 Aug 2014 10:44 AM

கமலா பெனிவால் மீது மீண்டும் பாய்கிறது: ரூ.1000 கோடி நில மோசடி வழக்கு

மிசோரம் மாநில ஆளுநர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட கமலா பெனிவால் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதிவு செய்யப்பட்ட ரூ.1000 கோடி நில மோசடி வழக்கு மீண்டும் பாயும் எனத் தெரிகிறது.

இவ்வளவு காலம் ஆளுநர் என்ற பாதுகாப்பு வளையத்தில் இருந்ததால் அவர் மீது விசாரணை நடத்தப்படாமல் இருந்தது.

காங்கிரஸைச் சேர்ந்த கமலா பெனிவால் முன்பு குஜராத்தில் ஆளுநராக இருந்தார். அப்போது நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே பல்வேறு மோதல்கள் நிலவி வந்தன.

இந்நிலையில் கடந்த மாதம் மிசோரம் மாநில ஆளுநராக மாற்றப்பட்ட அவர் சில நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் உத்தரவின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதில் அரசியல் ஏதும் இல்லை. அவர் மீதான முறைகேடு குற்றச் சாட்டுகளால்தான் நீக்கப்பட்டார் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விளக்கமளித்தார்.

இந்நிலையில் கமலா பெனிவால் மீதான ரூ.1000 கோடி நில மோசடி வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ளது. அவரது சொந்த மாநிலமான ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. 2012-ம் ஆண்டு சஞ்சய் அகர்வால் என்பவர், கமலா பெனிவால் உள்பட 16 பேர் மீது இந்த வழக்கை தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கமலா பெனிவாலைத் தவிர மற்றவர் களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

கமலா பெனிவால் அப்போது குஜராத் ஆளுநராக இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வில்லை. இதற்கிடையே இந்த முறைகேடு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, 16 பேருக்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்ற அறிக்கையை நீதிமன்றத்தில் கடந்த மே 15-ம் தேதி தாக்கல் செய்தது.

இதன் மீதான விசாரணையை ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதிக்கு நீதி மன்றம் ஒத்திவைத்துள்ளது. தற் போது கமலா ஆளுநர் பதவியில் இல்லாததால் குற்றவாளிகள் பட்டியலில் அவரது பெயரை சேர்க்கவும், நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றத்தில் வலியுறுத்துவோம் என்று நில மோசடி வழக்கை தொடர்ந்துள்ள சஞ்சய் அகர்வால் தரப்பு வழக்கறிஞர் அஜய் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தன் மீதான குற்றச் சாட்டை கமலா பெனிவால் மறுத் துள்ளார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் டும் கமலா பெனிவாலுக்கு ஆதர வாக கருத்துத் தெரிவித்துள்ளார். கமலா பெனிவால் மீதான வழக்கு பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சச்சின் பைலட் குற்றம்சாட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x