Published : 24 Aug 2014 01:04 PM
Last Updated : 24 Aug 2014 01:04 PM

பணம் இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி: போலி சாமியார் உட்பட இருவர் கைது

பூஜை செய்து பணத்தை இரட்டிப் பாக்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் உள்ளிட்ட இருவரை திருப்பதி போலீஸார் வெள்ளிக் கிழமை கைது செய்தனர். மேலும் ரூ. 16 லட்சம் ரொக்கம் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட் டம், குப்பம் அடுத்துள்ள வெண்டு காம்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சூரி என்கிற சுவாமி (32). இவர் தனது 20 வயதில் வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு மடங்களில் தங்கியுள்ளார். பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் மோசடியில் ஈடுபடத் தொடங்கினார்.

பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் சிலரின் வீட்டுக்குச் சென்று லஷ்மி பூஜை எனும் பெயரில் சூரி, பூஜைகள் செய்வார். அப்போது அவர்களிடம் பணத்தை வாங்கி பூஜையில் வைத்து வழிபடுவார். பக்தர்கள் ஏமாறும்போது தன்னிடம் உள்ள பணத்தை அந்த பூஜையில் வைத்து பணம் அதிகமாகி உள்ளதாக நம்ப வைப்பார்.

இதனால் பணக்காரர்கள் பலரும் இவரை தங்கள் வீட்டுக்கு பூஜை செய்ய வரும்படி அழைத்தனர். இந்நிலையில் பூஜைக்குப் பிறகு ஊமத்தம்பூ மற்றும் தூக்க மாத்திரைகளை கலந்து தயாராக வைத்திருக்கும் மயக்க பொடியை பிரசாதத்தில் கலந்து கொடுப்பார் இந்த போலி சாமியார். வீட்டில் உள்ள அனைவரும் மயங்கி விழுந்த பின், பூஜையில் வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி செல்வது இவரது வழக்கமானது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் திருப்பதி ஆட்டோ நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் யாதவ் என்பவரது வீட்டில் பூஜைகள் செய்து சுமார் ரூ. 63 லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார் சூரி. இது குறித்து திருப்பதி அலிபிரி காவல் நிலைய போலீஸார் சூரியை தேடி வந்தனர். இந்நிலையில் சந்திரகிரி அருகே சூரியை கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 16 லட்சத்து 84 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு கார், 2 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் திருப்பதியை சேர்ந்த தாமு என்பரையும் இந்த வழக்கில் கைது செய்தனர்.

கடந்த 2007 முதல் பொதுமக்களிடம் இதுவரை ரூ. 3 கோடி வரை மோசடி செய்துள்ளதாக சூரி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த பலரிடம் இவர் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x