Published : 24 Aug 2014 01:05 PM
Last Updated : 24 Aug 2014 01:05 PM

மகாராஷ்டிர அமைச்சர் பாலாசாஹிப் மீது மை வீச்சு

மகாராஷ்டிர வருவாய்த் துறை அமைச்சர் பாலாசாஹிப் தோரத் மீது சனிக்கிழமை மை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்தான் இதில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் சிவசேனா அலுவலகத்தை சூறையாடினர்.

மகாராஷ்டிரத்தின் அகமது நகர் தொகுதியில் உள்ள ராஜாபூர் கிராமத்தில் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பாலாசாஹிப் தனது காரில் அமர்ந்திருந்தார்.

சிவசேனை தொண்டர்

அப்போது அங்கு வந்த ஒருவர் அமைச்சர் மீது மையை வீசி விட்டு ஓடினார். அருகில் இருந்த போலீஸார் அவரை விரட்டிப் பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் பாகுசாஹிப் ஹாசி என்பது தெரியவந்தது. அவர் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த தோரத்தின் ஆதரவாளர்கள் அருகில் இருந்த சிவசேனா கட்சி அலுவலகத்தை சூறையாடினர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து தனது ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டுமென்று தோரத் கேட்டுக் கொண்டார்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் தலைவர் மீது மை வீசப்படுவது இது இரண்டாவது சம்பவமாகும். கடந்த 8-ம் தேதி கூட்டுறவுத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மீது மை வீசப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x