Published : 18 Aug 2014 10:00 AM
Last Updated : 18 Aug 2014 10:00 AM
உத்தரப் பிரதேசம் சஹரான்பூரில் ஏற்பட்ட கலவரத்துக்கு பாஜகதான் காரணம் என்று ஐந்து நபர் விசாரணைக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
சஹரான்பூரில் ரயில் நிலை யத்தை ஒட்டியுள்ள குருத்வாராவின் அருகில் காலி இடம் உள்ளது. அந்த இடம் குருத்வாராவுக்கு சொந்தமானது என்ற ஒரு தரப்பினரும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று மற்றொரு தரப்பினரும் உரிமை கொண்டாடினர்.
சர்ச்சைக்குரிய இடத்தில் கடந்த ஜூலை 26-ம் தேதி குருத்வாரா நிர்வாகிகள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டபோது இருதரப்பினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க மாநில அமைச்சர் ஷிவ்பால் யாதவ் தலைமையில் 5 பேர் குழுவை உத்தரப் பிரதேச அரசு நியமித்தது.
அந்தக் குழு தனது அறிக்கையை அரசிடம் ஞாயிற்றுக்கிழமை சமர்ப்பித்தது. அதில், பாஜக எம்.பி. ராகவ் லகான்பால்தான் கலவரத்தை தூண்டிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டுமானப் பணிகள் மேற் கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருக்கக்கூடாது, சம்பந்தப்பட்ட இடத்தில் இரு தரப்பினரும் குவிந்ததையும் அனுமதித்திருக்கக்கூடாது என்று அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT