Published : 22 Aug 2014 03:38 PM
Last Updated : 22 Aug 2014 03:38 PM
எதிர்க்கட்சித் தலைவர் இல்லா விட்டால், லோக்பால் அமைப்பு எப்படி செயல்படும் என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம் இதுகுறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மக்களவையில் காங்கிரஸ் கட்சி போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைப் பெறாததால், அக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல மனு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி, மக்களவை யில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து யாருக்கும் வழங்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்பால் சட்டத்தின்படி, லோக்பால் அமைப்பில் எதிர்க்கட்சித் தலைவரும் ஓர் உறுப்பினர் ஆவார். உறுப்பினர் இல்லாமல் அந்த அமைப்பு இயங்க முடியாது’ என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கியிடம், ‘லோக்பால் அமைப்பு, மத்திய ஊழல் கண்காணிப்புக்குழு தலைவர் தேர்வு போன்றவற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நிலையில் இந்த நடைமுறைகள் எப்படி சாத்தியம்?’ என்று கேள்வி எழுப்பினர்.
‘எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் எவ்வளவு காலம் கொண்டு செல்வீர்கள்?’ என்று கேட்ட நீதிபதிகள், ‘எதிர்க்கட்சித் தலைவரை முடிவு செய்யாவிட்டால், நீதிமன்றம் தலையிட்டு அதிக எண்ணிக்கையில் உள்ள கட்சியின் தலைவர் என்று விளக்கம் அளிக்க வேண்டியது வரும்’ என்று தெரிவித்தனர். இதுகுறித்து மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வழங்க முடியாது என்று மக்களவை சபாநாயகர் சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT