Published : 26 Aug 2014 08:24 PM
Last Updated : 26 Aug 2014 08:24 PM

ஷாரூக்கான் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு: தாதா மிரட்டல் எதிரொலி

தாதா ரவி புஜாரி விடுத்ததாகக் கூறப்படும் மிரட்டலை அடுத்து மும்பை புறநகர்ப் பகுதியில் ஷாரூக் கான் வசிக்கும் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஷாரூக்கானிடம் பணியாற்றும் ஊழியர் அந்த தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளார். அப்போது நிழலுலக தாதா என்று தன்னை வர்ணித்துக் கொண்ட ரவி புஜாரி என்ற அந்த நபர் பாலிவுட் தயாரிப்பாளர்கள் அலி மற்றும் கரிம் மொரானி படத்தில் நடிக்கக் கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கரிம் மொரானி 2ஜி ஊழல் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர். இவர் ஷாரூக் கானுக்கு மிகவும் நெருங்கியவர் என்று கூறப்படுகிறது.

ஆனால் மண்டல டி.சி.பி. சத்யநாராயண் சவுத்ரி இந்த மிரட்டல் வந்துள்ளதை மறுத்துள்ளார்.

ஷாரூக்கானின் வரவிருக்கும் படம் ஒன்றிற்கு அயல்நாட்டு விற்பனை உரிமைகளை அந்த தாதா கேட்டுள்ளார். அந்தப் படத்தின் விளம்பரங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது, அதனால் அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை தயாரிப்பாளர் மொரானி வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத சில நபர்கள் 5 முறை துப்பாக்கியால் சுட்டதை அடுத்து ஷாரூக்கானுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கரே தாய்பாவின் கொலைப்பட்டியலில் ஷாரூக்கான் பெயர் இருப்பதாக வந்த செய்திகளையடுத்து கடந்த ஜனவரி மாதம் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்பு சமீபத்தில்தான் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x