Published : 06 Apr 2014 12:00 PM
Last Updated : 06 Apr 2014 12:00 PM
பிஹாரில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வருடன் மாநில முதல்வர் நிதீஷ் குமார் ஒரே மேடையில் தோன்றியதால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஆளும் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
கயா நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஜாவேத் கான். ரியல் எஸ்டேட் தரகர் நவ்ஷாத் கான் கடந்த ஆண்டு ஏப்ரலில் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜாவேத் கானை கைது செய்ய கயா நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜாவேத் கான் தலைமையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் கயாவில் சனிக்கிழமை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் நிதீஷ் குமார் கலந்துகொண்டார்.
கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் முதல்வருடன் மேடையில் அமர்ந்ததைக் கண்ட பொதுமக்கள் கூச்சல் போட்டனர். இதையடுத்து, போலீஸார் ஜாவேத் கானை கைது செய்து தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் கே.கே. சிங் முன்பு ஆஜர்படுத்தினர். இந்த சம்பவத்தை பாஜக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT