Published : 14 Apr 2025 04:06 AM
Last Updated : 14 Apr 2025 04:06 AM
முர்ஷிதாபாத்: வக்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, மேலும் 5 கம்பெனி துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வக்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையே, வக்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் வக்பு சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்த நிலையில், வக்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் தீவிரமாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் 3 பேர் உயிரிழந்தனர். 150 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அங்கு மத்திய படைகளை அனுப்புமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டது.
வீரர்கள் மீது தாக்குதல்: இந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எல்லை பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால், பதற்றமான சூழ்நிலை உருவானதை அடுத்து, கூடுதலாக 5 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை டிஐஜி நீலோத்பல் குமார் பாண்டே கூறியதாவது: முர்ஷிதாபாத்தில் ஏற்கெனவே 4 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளனர். அங்கு பதற்றமான சூழல் உருவானதால், மேலும் 5 கம்பெனி வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான பகுதிகளுக்கு வீரர்கள் அனுப்பப்படுகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் தீவிர தாக்குதல் நடத்தியதால், கோஸ்பரா பகுதியில் கடந்த 12-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்த நேர்ந்தது. எங்களது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. சுதி, சம்சர்கஞ்ச் ஆகிய பகுதிகளில் பதற்றம் நீடிப்பதால், அங்கு அதிக அளவில் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment