Published : 01 Apr 2025 06:28 PM
Last Updated : 01 Apr 2025 06:28 PM
புதுடெல்லி: குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பனஸ்கந்தா மாவட்டத்தின் தீசா நகருக்கு அருகே இன்று காலை 9.45 மணியளவில் இந்த வெடிவிபத்து நேரிட்டுள்ளது. "இந்தச் சம்பவத்தில் 18 பேர் வரை உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தைத் தொடர்ந்து கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள். அவர்களில் பெரும்பாலானோர் மேற்கூரை சரிந்ததால் இறந்தனர்" என்று காவல் கண்காணிப்பாளர் அக்ஷய்ராஜ் மக்வானா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இந்த கட்டிடம் பட்டாசுகளை சேமிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதற்கான எந்த துப்பும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
குஜராத் முதல்வர் இரங்கல்: இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தீசாவில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தொழிலாளர்கள் இறந்த நிகழ்வு மனதை வாட்டுகிறது. இந்த துயரமான நேரத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், "இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம், மீட்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு விரைவில் சரியான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
மோகன் யாதவ் இரங்கல்: இந்தச் சம்பவத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மரணம் அடைந்ததை அடுத்து அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத் அதிகாரிகளுடன் தனது அரசு தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், விபத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment