Published : 30 Mar 2025 09:11 PM
Last Updated : 30 Mar 2025 09:11 PM

ஆபரேஷன் பிரம்மா: மியான்மருக்கு 52 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா!

புதுடெல்லி: பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு ‘ஆபரேஷன் பிரம்மா’ நடவடிக்கையின் கீழ் 52 டன் நிவாரணப் பொருட்களை கடற்படை கப்பல்கள் மூலம் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

இது குறித்த மத்திய அரசின் தகவல்: மியான்மரில் பேரழிவை ஏற்படுத்திய பூகம்பத்தைத் தொடர்ந்து, மியான்மருக்கு இந்திய அரசு உதவி வழங்குவதற்காக ‘ஆபரேஷன் பிரம்மா’ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள், இந்திய ராணுவம், இந்திய விமானப் படை, என்டிஆர்எஃப் ஆகியவற்றுடன் இணைந்து முயற்சிகள் நடைபெறுகின்றன.

மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணத்திற்கான (HADR) இந்திய கடற்படையின் உடனடி உதவியின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த இந்திய கடற்படை கப்பல்களான சத்புரா, சாவித்ரி ஆகியவை மார்ச் 29 அன்று யாங்கூனுக்குப் புறப்பட்டன.

கூடுதலாக, அந்தமான் - நிக்கோபார் கட்டளையகத்தைச் சேர்ந்த இந்திய கடற்படை கப்பல்களான கர்முக், எல்சியூ 52 ஆகியவையும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ இன்று (மார்ச் 30) யாங்கூனுக்கு பயணித்துள்ளது.

அத்தியாவசிய ஆடைகள், குடிநீர், உணவு, மருந்துகள் உட்பட சுமார் 52 டன் நிவாரணப் பொருட்கள் இந்த கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் 'பேரிடர்களின்போது முதலில் உதவி அளிக்கும் நாடு' என்ற இந்தியாவின் தீர்மானத்திற்கு ஏற்ப இந்திய கடற்படை உறுதிபூண்டு இந்தப் பணிகளைச் செய்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழப்பு 1,700 ஆக அதிகரிப்பு: மியான்மரில் கடந்த 28-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால், மண்டாலே நகரில் பல கட்டிடங்கள் இடிந்தன.

மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்டிட இடிபாடுகளை அகற்றுவதற்கு அங்கு போதிய வசதிகள் இல்லை. இதனால் உள்ளூர் மக்கள் கைகளால் இடிபாடுகளை அகற்றி உள்ளே யாரும் சிக்கியுள்ளனரா என தேடி வருகின்றனர். மியான்மரில் கோடை வெயில் 41 டிகிரி செல்சியஸாக உள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் மியான்மரில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்டு 2 நாட்கள் ஆவதால் கட்டிட இடிபாடுகளுக்குள் பிணவாடை வீசுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தோர் மியான்மர் மருத்துவமனையில் அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருக்களில் தங்கியுள்ளனர். அவர்கள் உணவு மற்றும் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் போராடி வருகின்றனர்.

மண்டாலே விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரம் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அங்கு வர்த்தக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் விமானங்கள் மட்டுமே அங்கு தரையிறங்க அனுமதிக்கப்படுகின்றன. இணைய சேவை மற்றும் போன் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.

இதனிடையே, மியான்மரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகளில் வெளிநாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x