Published : 28 Mar 2025 02:20 PM
Last Updated : 28 Mar 2025 02:20 PM

அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்திய விவகாரம்: கேஜ்ரிவால் மீது வழக்கு

அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப்படம்

புதுடெல்லி: டெல்லியில் விளம்பரப் பலகை வைக்க அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் நீதித்துறை மாஜிஸ்ட்ரேட் நேஹா மிட்டல் முன்பு டெல்லி போலீஸ் தாக்கல் செய்த அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக டெல்லியில் 2019-ல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின்போது துவாரகா முழுவதும் பெரிய விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன. இதற்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ குலாப் சிங், துவாரகா கவுன்சிலர் நிதிகா சர்மா ஆகியோருடன் இணைந்து அரசு நிதியை அப்போதைய முதல்வர் கேஜ்ரிவால் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக புகாரில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரி டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு மார்ச் 11-ம் தேதி அன்று உத்தரவிட்டிருந்தார்.

அரவிந்த் கேஜ்ரிவால் தவிர, முன்னாள் எம்எல்ஏ குலாப் சிங் மற்றும் துவாரகாவின் அப்போதைய கவுன்சிலர் நிதிகா சர்மா மீதும் பெரிய விளம்பரப் பதாகைகள் வைத்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் விளம்பரப் பலகை வைக்க அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கினை விசாரிக்க போலீஸார் கூடுதல் அவகாசம் கோரிய நிலையில் வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்.18-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x