Published : 28 Mar 2025 04:09 AM
Last Updated : 28 Mar 2025 04:09 AM

பிஎப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்துக்கு குறைவாக யுபிஐ மூலம் உடனடியாக பணம் எடுக்கும் வசதி

பிஎப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்துக்கும் குறைவான தொகையை யுபிஐ மூலம் உடனடியாக எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) சந்தாதாரர்கள், வீடு கட்ட, குழந்தைகளின் கல்வி கட்டணம் செலுத்த மற்றும் திருமண செலவுக்காக தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்காக இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு 2 அல்லது 3 நாட்களில் அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், உடனடியாக யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்ய பிஎப் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலத் துறை செயலாளர் சுமிதா டாவ்ரா நேற்று கூறியதாவது: பிஎப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை உடனடியாக யுபிஐ மூலம் எடுத்துக் கொள்வது தொடர்பாக தேசிய பணப்பட்டுவாடா கழகத்துடன் பேசி வருகிறோம். இந்த வசதி ஓரிரு மாதங்களில் அறிமுகம் செய்யப்படும். இதன்மூலம் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள தொகையை யுபிஐ மூலம் தெரிந்து கொள்ள முடியும். அத்துடன் தகுதியுடையவர்கள் ரூ.1 லட்சம் வரையிலான தொகையை உடனடியாக யுபிஐ மூலம் எடுத்துக் கொள்ளலாம். தானியங்கி பணப்பட்டுவாடா என்ற சாளரத்தின் கீழ் இந்த பரிவர்த்தனை செய்யப்படும். இந்த வசதியை அனைத்து சந்தாதாரர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2023-24 நிதியாண்டில் மொத்தம் 90 லட்சம் பேர் பிஎப் தொகையை எடுத்தனர். நடப்பு 2024-25 நிதியாண்டில் இதுவரை 1.9 கோடி பேர் பணம் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x