Published : 26 Mar 2025 11:06 AM
Last Updated : 26 Mar 2025 11:06 AM
லக்னோ: கருத்து சுதந்திரத்தை கொண்டு ஒருவர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் ஏற்புடையது அல்ல என குணால் கம்ரா விவகாரத்தில் உத்தர பிரதேச மாநில முதல் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை குணால் கம்ரா கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், “நாட்டை பிளவுப்படுத்த பேச்சு சுதந்திரத்தை சிலர் தங்களது பிறப்புரிமையாக கருதுகின்றனர். அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கருத்து சுதந்திரத்தை கொண்டு ஒருவர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் ஏற்புடையது அல்ல” என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
மேலும், கடந்த மக்களவை தேர்தலில் ஜார்ஜ் சோரஸ் வழங்கிய நிதியை கொண்டு ஆதிக்கம் செலுத்த காங்கிரஸ் கட்சி முயற்சித்ததாக யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி: 2017-க்கு முன்பு உத்தர பிரதேச மாநிலத்தில் கலவரங்கள் அடிக்கடி நடந்தன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாஃபியா கும்பல் இருந்தது. நாங்கள் இந்த மாஃபியாக்களை ஒழித்துக் கட்டினோம். ஒரு மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரியை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினோம் என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
குணால் கம்ரா என்ன சொன்னார்? - மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ரா. மும்பையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆட்டோ ஓட்டியவர் என்ற ரீதியில் கம்ரா தரக்குறைவாக பேசினார். மேலும் ஷிண்டேவை துரோகி என்று விமர்சித்தார். இதையடுத்து கம்ராவுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன. அவர் பேசிய ஸ்டுடியோவை சிவசேனா கட்சியினர் அடித்து நொறுக்கினர்.
இந்நிலையில், அவர் பேசிய நிகழ்ச்சி நடைபெற்ற ஹேபிடட் ஸ்டுடியோவின் சில பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் இடித்துத் தள்ளினர். மேலும், அதன் எஞ்சிய பகுதிகள் நேற்று இடிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...