Published : 26 Mar 2025 05:17 AM
Last Updated : 26 Mar 2025 05:17 AM

புதிய வருமான வரி மசோதா மழைக்கால தொடரில் அறிமுகம்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

புதிய வருமான வரி மசோதா வரும் மழைக்கால கூட்டத்தொடரின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

நாடாளுமன்ற மக்களவையில் 2025-ம் ஆண்டு நிதி மசோதா மீதான விவாதங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “இந்த அவையில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட வருமான வரி சட்டத் திருத்த மசோதா தற்போது தேர்வுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்வுக் குழு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்" என்றார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலையில் கூட்டப்பட்டு, ஆகஸ்ட் வரை நடைபெறும்.

எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா, 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் பாதி அளவே கொண்டது.

இந்த சட்டத்தில் 5.12 லட்சம் வார்த்தைகள் இருக்கும் நிலையில் புதிய மசோதாவில் 2.6 லட்சம் வார்த்தைகளே உள்ளன.

மேலும் 819 பிரிவுகளுக்கு பதிலாக 536 பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. அத்தியாயங்களின் எண்ணிக்கை 47-ல் இருந்து 23 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டத்தில் 18 அட்டவணைகள் இடம்பெற்றுள்ள நிலையில் வருமான வரி மசோதாவில் 57 அட்டவணைகள் உள்ளன. 1,200 விதிகள், 900 விளக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x