Published : 22 Mar 2025 04:25 AM
Last Updated : 22 Mar 2025 04:25 AM
தமிழ்நாட்டில் ரூ.93,376 கோடி மதிப்பிலான 98 சாகர்மாலா திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் உறுப்பினர் தரணிவேந்தன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சர்பானந்த சோனாவால் கூறியதாவது:
தமிழ்நாட்டில் ரூ.93,376 கோடி மதிப்பிலான 98 சாகர்மாலா திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் துறைமுக நவீனமயம், துறைமுகத்துடன் போக்குவரத்து இணைப்பு, துறைமுகம் தொடர்புடைய தொழில்கள் , கடலோர சமூகத்தினர் மேம்பாடு, கடலோர கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து போன்றவை விரிவாக்கம் செய்யப்படும்.
இந்த திட்டங்களில் ரூ.37,617 கோடி மதிப்பிலான 54 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ரூ.13,625 கோடி மதிப்பிலான 17 திட்டங்கள் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளன. ரூ.42,133 கோடி மதிப்பிலான 27 திட்டங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ரூ.5,294 கோடி மதிப்பிலான 8 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு 2 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 3 திட்டங்கள் அமலாக்குவதற்கு தயார் நிலையில் உள்ளன. 3 திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிற்கு பகுதியளவு நிதியுதவி அளிக்கப்படும் 22 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டன. ரூ.1240 கோடி மதிப்பிலான இந்த திட்டங்களில் 15 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 6 திட்டங்கள் அமல்படுத்த தயார்நிலையில் உள்ளன. ஒரு திட்டத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சாகர்மாலா திட்டம் திறன் மேம்பாட்டிற்கு உதவி செய்வதோடு மீன்பிடித்தல், சுற்றுலா போன்ற கடலோர தொழில்களையும் ஊக்கப்படுத்துகிறது. பெரிய கப்பல்களை நிறுத்துவதற்கும், சரக்குகள் கையாளுதலை முறைப்படுத்தவும், செலவைக் குறைத்து துறைமுகத் திறனை அதிகரிப்பதற்கும், ஏற்றுமதியாளர்களின் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தவும், தமிழ்நாட்டிலுள்ள பெரிய துறைமுகங்களின் உள்கட்டமைப்பை நவீனமாக்குவதில் அரசு கவனம் செலுத்துகிறது. இவ்வாறு சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...