Published : 18 Mar 2025 05:02 AM
Last Updated : 18 Mar 2025 05:02 AM
மொழி என்பது ஒருவருக்கொருவர் தகவல்களை பறிமாறிகொள்ள பயன்படுவது மட்டுமே. தாய்மொழியே சிறந்தது. ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி. தேவைப்பட்டால் பல மொழிகளை கற்கலாம். ஆதலால் மொழி அரசியல் தேவையற்றது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்தி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் அமராவதியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று பேசியதாவது: தற்போதைய சூழலில் ஆங்கிலம் கற்றால்தான் நல்ல வேலை கிடைக்கும் என்கிற நிலை உள்ளது. மொழி என்பது அறிவை வளர்க்க உதவும். ஒருவருக்கொருவர் தகவல்களை பறிமாறிகொள்ள மொழி பயன்படுகிறது. ஆனால், தாய்மொழி மிகவும் முக்கியமானது.
தாய்மொழியில் பயின்றவர்களே அதிக அறிவு சார்ந்தவர்களாக உள்ளனர். இதில் சந்தேகம் இல்லை. எந்த ஒரு மொழியையும் தாழ்த்தி பேசக்கூடாது. இங்கு தாய்மொழி தெலுங்கு. ஹிந்தி தேசிய மொழி. ஆங்கிலம் சர்வதேச மொழி. நம் நாட்டு மக்கள், மாணவர்கள் கல்வி பயிலவோ அல்லது வேலை நிமித்தமாகவோ ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்கின்றனர்.
தேவைப்பட்டால் ஜப்பான், பிரெஞ்ச் மொழிகளை இங்கேயே கற்றுக்கொண்டால், அங்கு செல்லும்போது மிகவும் சுலபமாக அங்குள்ள மக்களிடம் பழகலாம். வாழ்வதற்காக எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் தாய்மொழியை மறக்க மாட்டோம். தேசிய மொழியான ஹிந்தியை கற்றுக்கொண்டால் டெல்லி செல்லும்போது மற்றவர்களிடம் கூச்சப்படாமல் பேசலாம். ஆதலால் மொழி குறித்து அரசியல் செய்வது தேவையற்றது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...