Published : 16 Mar 2025 08:14 AM
Last Updated : 16 Mar 2025 08:14 AM

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? - பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியட்நாமுக்கு அடிக்கடி செல்வது ஏன் என பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த டிசம்பர் 26-ம் தேதி காலமானார். இதையடுத்து, ஒரு வாரத்துக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த ஜனவரி 1-ம் தேதி வியட்நாம் சென்றிருந்தார்.

“முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்ததற்காக நாடே துயரத்தில் இருக்கும்போது, ராகுல் காந்தி புத்தாண்டை கொண்டாட வியட்நாம் சென்றுள்ளார்” என பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில், ஹோலி கொண்டாட்டம் தொடங்கி உள்ள நிலையில் ராகுல் காந்தி மீண்டும் வியட்நாம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “புத்தாண்டின்போது வியட்நாம் சென்றிருந்த ராகுல் காந்தி, ஹோலி பண்டிகையை முன்னிட்டு அந்த நாட்டுக்கு சென்றிருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் தனது தொகுதியைவிட வியட்நாமில் அதிக நேரம் செலவிடுகிறார். வியட்நாம் மீதான பாசம் குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

இதுபோல பாஜக ஐ.டி.பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் தளத்தில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முக்கிய பதவியில் உள்ள ராகுல் காந்தி, ரகசியமாக அடிக்கடி வெளிநாட்டுக்கு பயணம் செய்கிறார். குறிப்பாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் அவரது பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x