Published : 15 Mar 2025 11:38 PM
Last Updated : 15 Mar 2025 11:38 PM
உத்தர பிரதேசம் சம்பல்வாசிகள் இடையே ஜாமியா மசூதிக்கு எந்த வண்ணம் பூசுவது என்பதில் புதிய மோதல் துவங்கி உள்ளது. இதில், முஸ்லிம் தரப்பு பச்சை நிறமும், இந்து தரப்பு காவி நிறமும், அரசு நிர்வாகம் வெள்ளை நிறமும் பூச வலியுறுத்தி வருகின்றனர்.
உ.பி.யின் சம்பலில் 1526-ல் ஷாயி ஜாமியா மசூதி கட்டி முடிக்கப்பட்டது. முகலாய மன்னர் பாபர் ஆட்சியில் கட்டப்பட்ட வட இந்தியாவின் முதல் மசூதியாக இது கருதப்படுகிறது. இதை அங்கிருந்த ஸ்ரீஹரி எனும் சிவன் கோயிலை இடித்துவிட்டு கட்டியதாக சர்ச்சை எழுந்தது. இதன் மீதான சம்பல் மாவட்ட நீதிமன்ற வழக்கில் மசூதியில் கள ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இந்தக் கள ஆய்வு நடைபெற்ற நவம்பர் 24-ல் கலவரம் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த மசூதிக்கு ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்காக வண்ணம் பூசுவது வழக்கம். இதற்கு சம்பல் மசூதி கமிட்டிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதனால், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மசூதி கமிட்டி மனு அளித்தது. இதற்கான அனுமதியை அளித்த நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், மசூதியின் வெளிப்புறத்தில் மட்டும் வண்ணம் பூச இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிட்டார்.
இச்சூழலில், எந்த நிறத்தில் வண்ணம் பூசுவது என்பதில் புதிய மோதல் துவங்கி உள்ளது.
சம்பல் மசூதிக்கு வழக்கம்போல், பச்சை நிறம் பூசவேண்டும் என முஸ்லிம்கள் கோரியுள்ளனர். ஆனால் இது கோயிலை இடித்துக் கட்டப்பட்டதால் காவி நிறம் பூசவேண்டும் என இந்து தரப்பினர் வலியுறுத்துகின்றனர். இப்பிரச்சினையில் சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்தர் பன்சியா கூறுகையில், "நீதிமன்ற உத்தரவின்படி மசூதிக்கு வண்ணம் பூசப்படுகிறது.
எனவே நீதிமன்றத்தில் மனு செய்து உத்தரவு பெறுவதே சரியாக இருக்கும். பச்சை, காவி ஆகிய 2 நிறத்துக்கும் பொதுவாக வெள்ளை நிறத்தை பூசலாம் என நீதிமன்றத்தில் கூறுவோம்" என்றார்.
இதனிடையே, சம்பலில் நேற்று முன்தினம் ஹோலி பண்டிகை கொண்டாட்டமும் வெள்ளிக்கிழமை தொழுகையும் அமைதியாக நடந்து முடிந்தது. மசூதிக்கு வண்ணம் பூசும் வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 8-ல் வர உள்ளது. இதற்கு முன் ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 1-ல் எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...