Published : 05 Mar 2025 05:59 AM
Last Updated : 05 Mar 2025 05:59 AM
துபாயில் இருந்து 14.8 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவ் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த ரன்யா ராவ் (32) கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‛வாகா' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ரன்யா ராவ் துபாயில் இருந்து பெங்களூருக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தார். அவர் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிக தங்க நகைகளை அணிந்திருந்தார். அவரது உடைமைகளை சோதித்தபோது 25 தங்க கட்டிகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர்.
கர்நாடக காவல் துறையில் டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் எனவும், பெங்களூரு மாநகர போலீஸார் என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் எனவும் ரன்யா ராவ் கூறியுள்ளார். இருப்பினும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில் ரன்யா ராவ் கடந்த 15 நாட்களில் 4 முறை துபாய்க்கு பயணம் செய்தது தெரியவந்தது. ஒவ்வொரு முறையும் தங்கம் கடத்தி வந்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சட்ட விரோதமாக தங்கம் கடத்தியதாக ரன்யா ராவ் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் இருந்த 14.8 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். அவரை நேற்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 3 நாள் காவலில் எடுத்துள்ளனர்.
நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கின் பின்னணியில் முக்கிய புள்ளிகள் சிலர் இருக்கலாம் என வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அந்த கும்பல், அவரை தங்கம் கடத்த பயன்படுத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment