Published : 19 Feb 2025 10:48 AM
Last Updated : 19 Feb 2025 10:48 AM
அமராவதி: புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தங்கள் பணியை முடித்துக் கொண்டு செல்லலாம் என ஆந்திர மாநிலத்தில் ஆட்சியில் உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே உத்தரவை தெலங்கானாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு அறிவித்தது. இதை பாஜக விமர்சித்திருந்த நிலையில் தற்போது ஆந்திர அரசும் அதே உத்தரவை வெளியிட்டுள்ளது.
ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் மார்ச் 2 முதல் மார்ச் 30 வரையிலான நாட்களில் ஆசிரியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் என பல்வேறு அரசு துறை ஊழியர்கள் தங்கள் பணியில் இருந்து ஒரு மணி முன்னதாக செல்லலாம் என தெலங்கானா அரசு அறிவித்தது.
“ரமலானை முன்னிட்டு முஸ்லிம் ஊழியர்கள் பணியில் இருந்து முன்கூட்டியே செல்ல அனுமதிக்கும் தெலங்கானா அரசு ஏன் இந்துப் பண்டிகைகளுக்கு அது மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை” என அந்த மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கேள்வி எழுப்பி இருந்தார்.
“கடந்த காலங்களில் மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் இது மாதிரியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது புதிய உத்தரவு அல்ல. பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட இந்த சலுகை உள்ளது” என தெலங்கானா காங்கிரஸ் பிரமுகரும் மாநில அரசின் சிறுபான்மையினர் நலன் ஆலோசகருமான முகமது அலி ஷபீர் கூறியுள்ளார்.
இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆந்திர அரசும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்கள் பணியில் இருந்து ஒரு மணி நேரம் முன் கூட்டி செல்லலாம் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...