Published : 19 Feb 2025 05:38 AM
Last Updated : 19 Feb 2025 05:38 AM
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் முதல் முறையாக நக்சல் எதிர்ப்பின்றி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றதாக மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட பஞ்சாயத்து தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 76 சதவீத வாக்குகள் பதிவாகின. இது குறித்து முதல்வர் விஷ்ணு தியோ சாய் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக பஞ்சாயத்து தேர்தலுக்கு நக்சல் எதிர்ப்பு இல்லை. நக்சல் பாதிப்பு அதிகம் இருந்த சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் உள்ள 130 வாக்குச்சாவடிகளில் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். மாவாயிஸ்ட் கமாண்டர் ஹித்மாவின் சொந்த கிராமமான புவர்த்தியிலும், உள்ளூர் மக்கள் நேற்று வாக்களித்தனர்.
நக்சல் தீவிரவாதம் முடிவுக்கு வந்து ஜனநாயக வெற்றி ஏற்பட்டுள்ளது திருப்தியை அளிக்கிறது. நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை முகாம்களை அமைத்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பஸ்தர் பகுதியை புற்றுநோய் போல் அழித்து வந்த நக்சல் தீவிரவாதத்துக்கு, இரட்டை இன்ஜின் அரசு முடிவு கட்டுகிறது. இவ்வாறு விஷ்ணு தியோ சாய் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment