Published : 19 Feb 2025 01:04 AM
Last Updated : 19 Feb 2025 01:04 AM
புதுடெல்லி: அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடியை தொழிலதிபர் எலான் மஸ்க் சந்தித்து பேசிய நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்க ஆர்வமாக உள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், அதிக இறக்குமதி வரி உள்ளிட்ட காரணங்களால் டெஸ்லா தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில், 40 ஆயிரம் டாலர்களுக்கு மேல் விலை கொண்ட அதிநவீன சொகுசு கார்களுக்கான அடிப்படை இறக்குமதி வரியை 110%-லிருந்து 70 சதவீதமாக இந்திய அரசு குறைத்துள்ளது. இந்த சூழலில், கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடியை, டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் சந்தித்துப் பேசினார்.
இந்த பின்னணியில், இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுப்பது தொடர்பான விளம்பரத்தை லிங்க்டு இன் பக்கத்தில் டெஸ்லா திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் 13 பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதில் தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட 5 பதவிகள் டெல்லி மற்றும் மும்பைக்கு தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலாளர் மற்றும் விநியோக அதிகாரி உள்ளிட்ட மற்ற பதவிகள் மும்பைக்கு தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் முக்கிய பொறுப்பு (டிஓஜிஇ) வகிக்கிறார். இந்நிலையில், பிரதமர் மோடியை எலான் மஸ்க் தனியார் நிறுவன சிஇஓ-வாக சந்தித்தாரா அல்லது அரசு சார்பில் சந்தித்தாரா என்ற தகவல் வெளியாகவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...