Published : 14 Feb 2025 11:07 AM
Last Updated : 14 Feb 2025 11:07 AM
வாஷிங்டன்: அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு சிறப்புப் பரிசை வழங்கினார். அந்தப் பரிசில், ‘பிரதமரே நீங்கள் சிறந்தவர்’ என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார் ட்ரம்ப்.
‘Our Journey Together’ என்ற காபி டேபிள் புத்தகத்தில் தான் ட்ரம்ப் இவ்வாறு எழுதிக் கொடுத்துள்ளார். 320 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் 'ஹவுடி மோடி' (Howdy Modi) மற்றும் 'நமஸ்தே டிரம்ப்' (Namaste Trump) நிகழ்வுகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்தப் புத்தகத்தை ட்ரம்ப் ஒவ்வொரு பக்கமாக பிரதமர் மோடியிடம் திருப்பிக் காட்டிப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாகப் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, “இந்தியப் பிரதமர் மோடி இங்கே வருகை தந்திருப்பது சிறப்பானது. அவர் என்னுடைய நீண்ட கால நல்ல நண்பர். எங்களுக்குள் சிறப்பான உறவு இருக்கிறது.” என்றார்.’
இந்தியா, மோடியுடனான தனது நல்லுறவை சிலாகித்த ட்ரம்ப் அதேவேளையில் அமெரிக்கா மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக கவலையும் தெரிவித்தார். ‘இந்தியா எங்களுக்கு விதிக்கும் வரியைத்தான் நாங்கள் அவர்களுக்கு விதிக்கிறோம். இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவில் சில அற்புதமான ஒப்பந்தங்களுக்காகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்’ என்றார்.
இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு மட்டுமல்லாது ராணுவம், வர்த்தகம், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப துறை, அணுசக்தித் துறையிலும் அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...