Published : 02 Feb 2025 08:06 AM
Last Updated : 02 Feb 2025 08:06 AM
புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கு நடுத்தர வர்க்கத்தினர் வலிமையை வழங்குவதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் பலன்பெறும் வகையில் வருமான வரி சலுகை உட்பட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், பட்ஜெட்டுக்கு சம்பளதாரர்கள், நடுத்தர வர்க்கத்தினரிடையே வரவேற்பு எழுந்துள்ளது. பட்ஜெட் உரையில் நடுத்தர வர்க்கத்தினரை பாராட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
2047-ம் ஆண்டு வளர்ச்சியடைந்த பாரதம் என்பதே எங்கள் இலக்கு. அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் ஜனநாயகம், மக்கள் தொகை மற்றும் தேவைகள் ஆகியவை முக்கிய ஆதரவு தூண்களாக உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு நடுத்தர வர்க்கத்தினர் வலிமையை வழங்குகின்றனர். நாட்டின் வளர்ச்சிக்கான கட்டமைப்பில் நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவையும் திறனையும் பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு நம்புகிறது.
தேசத்தின் வளர்ச்சியில் நடுத்தர வர்க்கத்தினரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவ்வப்போது வெவ்வேறு வழிகளில் அவர்களின் வரிச்சுமையை நாங்கள் குறைத்துள்ளோம். இப்போதும் வருமான வரி சலுகை போன்றவற்றின் மூலம் அவர்களது வரிச்சுமையை பட்ஜெட்டில் குறைத்துள்ளோம். இதன் மூலம் நடுத்தர மக்களின் வரிச்சுமை குறைவதோடு, அவர்களின் சேமிப்பை அதிகரிக்கவும் முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...