Published : 02 Feb 2025 08:05 AM
Last Updated : 02 Feb 2025 08:05 AM
பாதுகாப்புத் துறை: நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கலான பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: 2025-26-ம் நிதியாண்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ.6,81,210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தத் தொகை ரூ.6,21,940 கோடியாக இருந்தது. வரும் நிதியாண்டில் பாதுகாப்புத்துறையின் வருவாய் செலவினம் ரூ.4,88,822 கோடியாக இருக்கும். இதில் பென்ஷனுக்கான பங்கு ரூ.1,60,795 கோடியும் அடங்கும். ரூ.48,614 கோடியில் விமானங்கள், விமான இன்ஜின்கள் வாங்குவதற்கும், ரூ.24,390 கோடி கடற்படைப் பிரிவுக்கும் ஒதுக்கப்படும். மேலும் ரூ.63,099 கோடி இதர கருவிகள் வாங்குவதற்கு செலவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை: வரும் 2025-26 நிதியாண்டுக்கு சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2.87 லட்சம் கோடி ஒதுக்கப்படும். இது நடப்பு நிதியாண்டின் ரூ.2.8 லட்சம் கோடியைவிட 2.41 சதவீதம் அதிகம். மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு (என்எச்ஏஐ) ரூ.1.87 லட்சம் கோடி ஒதுக்கப்படும். இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் என்எச்ஏஐ-யின் கடன் ரூ.3.35 லட்சம் கோடியாக இருந்தது. இது 3-வது காலாண்டு முடிவில் ரூ.2.76 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. வரும் நிதியாண்டில் கடன் அளவை மேலும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
குடிநீர், சுகாதாரத்துக்கு: வரும் நிதியாண்டில் ஜல் ஜீவன் திட்டத்துக்காக ரூ.67,000 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மூலம் 15 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2028-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், இதில் நதிநீர் வளர்ச்சி மற்றும் கங்கை புனரமைப்புத் திட்டத்துக்காக ரூ.25,276 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நமாமி கங்கா மிஷன்-2 திட்டத்துக்கு ரூ.3,400 கோடி தரப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்துக்காக ரூ.7,192 கோடியும், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி தேசிய குடிநீர், சுகாதார இன்ஸ்டிடியூட்டுக்கு ரூ.89.53 கோடியும் ஒதுக்கப்படும். பழங்குடி மக்களுக்கு குடிநீர் வசதி அளிக்கும் பிரதமரின் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (பிஎம்-ஜன்மன்) திட்டத்துக்கு ரூ341.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் நிர்வாகத் திட்டத்துக்காக ரூ.1,780 கோடியும், நிலத்தடி நீர் ஒழுங்கமைப்பு முயற்சிகளுக்காக ரூ.509 கோடி ஒதுக்கப்பட்டுளளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுக்கு: பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.26,889 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்தில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. பெண்கள், குழந்தைகள்மேம்பாட்டுக்காக அந்தத் துறை அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.26,889.69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில் இது சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அதிகமாகும்.
குழந்தைகள், சிறுமிகளுக்கு சத்தான உணவுகிடைப்பதை உறுதி செய்து அவர்களது ஆரோக்கியத்தை பலப்படுத்தவும் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்கவும் அங்கன்வாடி உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும் சக்க்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்துக்கு ரூ.21,960 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதம மந்திரி ஜன்மான் திட்டத்தின் கீழ் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குறிப்பிட்ட 75 பழங்குடியின குழுக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காக பட்ஜெட்டில் ரூ. 120 கோடியும் பழங்குடியினர் நலனுக்காக ரூ.75 கோடியும் ஒதுக்கப்படுகிறது. குழந்தைகள் தத்தெடுப்பு, அவர்களது பாதுகாப்பு சேவைகளுக்காக மிஷன் வாத்சல்யா திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1,391 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு ரூ.1,500 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதி செய்யும் மிஷன் சக்தி திட்டத்துக்கு ரூ. 3,150 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை பாதுகாப்போம் கற்பிப்போம், பெண் போலீஸ் தன்னார்வலர்கள், பெண்கள் ஹெல்ப்லைன் போன்றவற்றை உள்ளடக்கிய ‘சம்பல்’ திட்டத்துக்கு ரூ.629 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், தேசிய மகளிர் ஆணையம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு முறையே ரூ.28 கோடியும் ரூ.25 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்காக வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.2,618.38 கோடியும் மாநிலங்களுக்கு ரூ.22,195.95 கோடியும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.897.40 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்துக்கு: 2025-26-ம் நிதியண்டுக்கான பட்ஜெட்டில் உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2,33,210.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பெரும் பங்கு அதாவது ரூ.1,60,391.06 கோடி மத்திய காவல் படைகளான சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப் போன்றவற்றுக்கு வழங்கப்பட உள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு போன்ற பணிகளை இந்த காவல் அமைப்புகள்தான் மேற்கொண்டுள்ளன. கடந்த 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.2,19,643.31 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையி்ல் தற்போது அதைவிட கூடுதலான தொகை உள்துறை அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பயிற்சி, நிர்வாக சீர்திருத்தங்களுக்கு: அரசு அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பது மற்றும் நிர்வாக சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.434 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டு முதல் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய அதிகாரிகளுக்கு உட்கட்டமைப்பு தொடர்பான பயிற்சிகளை அளிக்க மத்திய பணியாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.334 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, நிர்வாக சீர்திருத்தங்களை செய்வதற்காகவும் இந்த பட்ஜெட்டில் ரூ.100 கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அணுமின் சக்தி திட்டங்களுக்கு: 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அணுமின் சக்தித் திட்டங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது: வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அணுமின் சக்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம். அணுமின்சக்தி துறைக்கு ஊக்கம் தருவது முக்கியமானது. நமது நாட்டில் மின்சாரம் தயாரிப்பதற்கு அடிப்படையாக நிலக்கரி உள்ளது. ஆனால், அதை மாற்றி அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க முன்னுரிமையை மத்திய அரசு அளித்து வருகிறது.
வரும் நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி அணுமின் சக்தி தயாரிப்பதற்கு ஒதுக்கப்படும். 2047-ம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதற்காக தனியார் நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். 2033- ம் ஆண்டுக்குள் நமது நாட்டில் 5 சிறிய ரக அணு உலைகள் (எஸ்எம்ஆர்) நிறுவப்படும். அணுமின்சக்தி தயாரிக்க உதவும் 25 முக்கிய கனிமங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும். இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.
சிறைகளை நவீனமயமாக்க: சிறைகளை நவீனமயமாக்க ரூ.300 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளை நவீனமயமாக்க பட்ஜெட்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் இதே அளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. குற்ற நடவடிக்கைகளில் இருந்து சமூகத்தை காக்க மாதிரி சிறைகள் சட்டத்தை கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் இறுதி செய்தது. கைதிகளுக்கு சட்ட உதவி, சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதி, பாதுகாப்பு மேம்பாடு, நவீனமயமாக்கல், கைதிகளுக்கான தொழிற் பயிற்சி, அவர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது. இதற்கான செலவினங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.300 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் அலுவலகத்துக்கு: குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.141.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் சம்பளம், இதர படிகள், ஜனாதிபதி மாளிகை ஊழியர்களுக்கான சம்பளம், நிர்வாக செலவுகள் உள்ளிட்டவற்றுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.141.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.60 லட்சம் குடியரசுத் தலைவரின் சம்பளம், படிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் குடியரசுத் தலைவர் சம்பளத்துக்காக இதே தொகை ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.133.61 கோடியாகும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதலாக ரூ.8.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற கட்டமைப்பு: மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு, நகர்ப்புற சவால் நிதியம் என்ற பெயரில் ரூ.1 லட்சம் கோடியில் நிதியம் உருவாக்கப்படும். ‘வளர்ச்சி மையங்களாக நகரங்கள்', 'நகரங்களின் ஆக்கப்பூர்வமான மறுவளர்ச்சி' மற்றும் ‘நீர் மற்றும் சுகாதாரம்' ஆகிய திட்டங்களைச் செயல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்த திட்டங்களுக்கான செலவில் 25 சதவீதம் வரை புதிய நிதியம் மூலம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவீத செலவு பத்திரங்கள், வங்கி கடன்கள் மற்றும் அரசு-தனியார் கூட்டாண்மை (பிபிபி) மூலம் நிதியளிக்கப்படும். வரும் 2025-26 நிதியாண்டுக்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். மலிவு மற்றும் நடுத்தர வருமான வீட்டுவசதிக்கான சிறப்பு சாளரத்தின் (SWAMIH) கீழ், 50,000 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மேலும் 40,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும், இது அடுக்குமாடி குடியிருப்புகளுக்காக வாங்கிய கடன்களுக்கு ஈ.எம்.ஐ செலுத்தும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு மேலும் உதவும்.
ரயில்வே: ரயில்வே துறைக்கு கடந்தாண்டைப் போலவே 2025-26 நிதியாண்டுக்கும் ரூ.2.55 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரயில்வே விரிவாக்க திட்டங்கள் பரவலாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஒதுக்கீடு குறைவானது என்றும், அதன் வளர்ச்சி இலக்குகளை சந்திப்பதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இத்துறையைச் சேர்ந்தவரகள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ.2,55,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது, அதற்கு முந்தைய 2023-24 நிதியாண்டின் ஒதுக்கீடான ரூ.2,40,200 கோடியுடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் அதிகமாகும்.
பாதுகாப்பு மற்றும் மின்மயமாக்கலில் ரயில்வே துறை அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்திய ரயில்வேக்கான ஒதுக்கீடு கடந்தாண்டைப் போலவே வரும் ஆண்டிலும் மாறாமல் ரூ.2.55 லட்சம் கோடியாகவே இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்திஉள்ளது.
விளையாட்டு: வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.3,794 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கலான பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: 2025-26-ம் நிதியாண்டில் விளையாட்டுத்துறைக்கு கூடுதலாக ரூ.351.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கேலோ இந்தியா திட்டத்துக்கு மட்டும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக ரூ.3,794.30 கோடி தரப்பட்டுள்ளது. விரைவில் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வரவுள்ளதால் கூடுதலாக விளையாட்டுத்துறைக்கு ரூ.351 கோடி தரப்பட்டுள்ளது.2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு இந்தியா விண்ணப்பித்துள்ளது. அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பொருட்டு விளையாட்டுத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறை: மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.28 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உயர் கல்வித்துறைக்கு ரூ.50,067 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறைக்கு ரூ.78,572 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கல்வியில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்காக புதிய சீர்மிகு மையம் ரூ.500 கோடியில் அமைக்கப்படவுள்ளது. ஐஐடிக்களில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன. 2014-ம் ஆண்டுக்குப்பின் 5 ஐஐடிக்களில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டதால், கூடுதலாக 6,500 மாணவர்கள் படிக்கும் வசதி ஏற்பட்டுள்ளது. ஐஐடி பாட்னாவில் தங்கும் விடுதி வசதி உட்பட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 65,000-லிருந்து ரூ.1.35 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐஐடிக்களுக்கு மட்டும் ரூ.11,349 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் பிராண்ட் பேண்ட் இணைப்பு வழங்கப்படவுள்ளது. அரசு பள்ளிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 50,000 அடல் டிங்கரிங் கூடங்கள் உருவாக்கப்படும். திறன்மேம்பாட்டுக்கு 5 தேசிய திறன் மையங்கள் அமைக்கப்படும். பள்ளிகள் மற்றும் உயர்கல்வியில் இந்திய மொழி புத்தகங்களை வழங்க பாரதிய பாஷா புஷ்தக் திட்டத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது.
மூலதன செலவினங்களுக்கு: 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மூலதனசெலவினங்களுக்காக ரூ.11.21 லட்சம் கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், நடப்பு நிதி ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட மூலதன திட்டங்களுக்கான இலக்குகள் எட்டப்படவில்லை என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய பட்ஜெட் மதிப்பீட்டின்படி ரூ.11.11 லட்சம் கோடி மூலதன செலவினங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் திருத்திய மதிப்பீட்டில் 10.18 லட்சம் கோடி மட்டுமே செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, மூலதன செலவின் இலக்கில் ரூ.93,000 கோடி எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி: சிபிஐ விசாரணை அமைப்புக்கு பட்ஜெட்டில் ரூ.1,071 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ அமைப்பை பலப்படுத்தவும் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், சிபிஐக்கு ரூ.1,071 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட ரூ.84.12 கோடி அதிகமாகும். அமைப்பு ரீதியான செலவினங்கள், சிபிஐயின் பயிற்சி மையங்களை நவீனமயமாக்கல், நிலம் வாங்குதல், அலுவலகம், குடியிருப்பு கட்டிடங்கள் அமைத்தல் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்தத் தொகை ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் மேம்பாட்டுக்கு: கடல்சார் தொழில் துறையின் நீண்ட கால நிதியுதவிக்காக ரூ.25,000 கோடியில் கடல்சார் மேம்பாட்டு நிதியம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். இந்த மொத்த ஒதுக்கீட்டில் 49சதவீதம் அரசின் பங்களிப்பாக இருக்கும். மீதமுள்ள தொகை துறைமுகங்கள் மற்றும் தனியார் துறையிலிருந்து திரட்டப்படும். மேலும், கப்பல் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பாகங்கள் மற்றும் உள்ளீடுகள் மீதான சுங்க வரி விலக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம், உள்நாட்டு கப்பல் கட்டுமானத்தை ஊக்குவித்து சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கிற்கு இந்த திட்டம் மிக முக்கியமானதாகும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமூக நீதி துறை: மத்திய பட்ஜெட்டில் சமூக நீதித் துறைக்கு ரூ.13,611 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பட்டியலின மாணவ, மாணவியரின் கல்வி உதவித் தொகைக்கு ரூ.212 கோடி, ஓபிசி, பட்டியலின மாணவர்களின் இலவச சிறப்பு பயிற்சிக்கு ரூ.20 கோடி, பட்டியலின மாணவர்களின் உயர் கல்விக்கு ரூ.110 கோடி, பட்டியலின மாணவர்களின் வெளிநாட்டு கல்வி உதவித் தொகைக்கு ரூ.130 கோடி, ஓபிசி மற்றும் இபிசி பிரிவு மாணவர்களின் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.ஓபிசி மற்றும் இபிசி மாணவர்களின் உயர் கல்வி சார்ந்த பிஎம் யாசவி திட்டத்துக்கு ரூ.2,190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பட்ஜெட்டில் ரூ.1,275 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment