Published : 01 Feb 2025 07:06 AM
Last Updated : 01 Feb 2025 07:06 AM
உள்நாட்டு வியமானங்களில் பயணம் மேற்கொள்வோர் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இதுதொடர்பாக சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
இந்தியாவில் மக்கள், அதிக அளவில் உள்நாட்டு பயணங்களை மேற்கொள்கின்றனர். கடந்த 2024-ம் ஆண்டில் உள்நாட்டு விமானங்களில் 16.3 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இது சாதனை அளவாகும்.
இதன் மூலம் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் 15.2 கோடியை விட 6 சதவீதம் அதிகமாகும்.
இதன்மூலம் 2024-ம் ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு விமானங்கள் 86.4 சதவீத பயணிகளை சுமந்து சென்றுள்ளன. அதாவது உள்நாட்டு விமானங்களில் சராசரியாக 86.4 சதவீத இருக்கைகள் நிரம்பியுள்ளன.
இந்த வரிசையில் 2-வது இடத்தில் அமெரிக்காவும் (84.1 சதவீதம்), 3-வது இடத்தில் சீனாவும் (83.2 சதவீதம்) உள்ளன.
இந்தத் தகவல்கள் சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தில் (டிஜிசிஏ) இருந்து பெறப்பட்டுள்ளன என்று ஐஏடிஏ தெரிவித்துள்ளது.
இதற்கு அடுத்த இடங்களில் ஆஸ்திரேலியாவும் (81.8 சதவீதம்), ஜப்பானும் (78 சதவீதம் உள்ளன). கடந்த ஆண்டில் உள்நாட்டு விமானப் பயணங்கள், வெளிநாட்டு விமானப் பயணங்களை இந்தியர்கள் அதிக அளவில் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ஐஏடிஏ தலைமை இயக்குநர் வில்லி வால்ஷ் கூறும்போது, “இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணங்களில் கடந்த ஆண்டில் அதிக அளவில் இருக்கைகள் சராசரியாக நிரம்பியிருந்தன. இது ஒரு புதிய அளவிலான சாதனையாகும். வேலை, சந்தை மேம்பாடு, வர்த்தகம், புதுமை, ஆய்வு ஆகியவற்றின் மூலம் சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய அனைத்து நிலைகளிலும் விமானப் போக்குவரத்துத்துறையின் வளர்ச்சி எதிரொலிக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment