Published : 31 Jan 2025 04:24 PM
Last Updated : 31 Jan 2025 04:24 PM
பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய நீதி விசாரணை ஆணையம் வெள்ளிக்கிழமை பிரயாக்ராஜ் சென்று ஆய்வைத் தொடங்கியது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஹர்ஷ் குமார் தலைமையிலான இந்த விசாரணைக் குழுவில், முன்னாள் காவல் துறை இயக்குநர் (டிஜிபி) வி.கே.குப்தா மற்றும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி டி.கே.சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "விசாரணை ஆணையம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தி வருகிறது. அவர்கள் அன்று சம்பவம் நடந்த இடத்தையும் பார்வையிடுகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. இங்கு மவுனி அமாவாசை (தை அமாவாசை) நாளான கடந்த 29-ம் தேதி கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார்.
விசாரணையை முடிக்க ஆணையத்துக்கு ஒரு மாத கால அவகாசம் இருக்கிறது என்ற போதிலும், ஆணையம் தனது விசாரணையை விரைவாக முடிக்க முயற்சிக்கும் என்று ஆணையத்தின் தலைவர் குமார் தெரிவித்தார்.
பிரம்ம முகூர்த்ததில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்காக கூடிய கூட்டம் தடுப்புகளை உடைத்து, ஏற்கெனவே அங்கு நீராடுவதற்காக காத்திருந்த கூட்டத்தின் மீது மோதியதால் நெரிசல் ஏற்பட்டதாக போலீஸார் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கும்பமேளா பகுதி முழுவதும் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விஐபி பாஸ் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. திரிவேணி சங்கமத்தில் நீராட செல்வதற்கு ஒரு பாதையும், புனித நீராடிவிட்டு வெளியேற தனி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ரயில், பேருந்துகளில் பாதுகாப்பாக சொந்தஊருக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment