Published : 31 Jan 2025 02:19 PM
Last Updated : 31 Jan 2025 02:19 PM
புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பிறகு இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் தனது உரையை நிகழ்த்தினார். அவரது இந்தி உரையை அடுத்து, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அதன் ஆங்கில உரையை வாசித்தார். இதனைத் தொடர்ந்து குடியரசு தலைவர், நாடாளுமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதன் தொடர்ச்சியாக, சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவையும், மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தலைமையில் மாநிலங்களவையும் கூடின. முதலில், மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அறிக்கையின் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவதாக அவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் அவர் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து, அவை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு மக்களவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். இதேபோல், மாநிலங்களவையில் மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்தியதை அடுத்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து, மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT