Published : 31 Jan 2025 03:42 AM
Last Updated : 31 Jan 2025 03:42 AM
வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஆராய்ந்து வந்த நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான இறுதி அறிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நேற்று வழங்கியது.
வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு தரப்பில் கருத்துகள் கேட்கப்பட்டு ஆய்வுகள் முடிந்த நிலையில் இந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான இறுதி அறிக்கைக்கு 15-11 என்ற வாக்குகள் அடிப்படையில் பெரும்பான்மை கிடைத்த நிலையில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வக்பு சட்ட திருத்த மசோதா தொடர்பான வரைவு அறிக்கையை ஜேபிசி தலைவர் ஜெகதாம்பிகா பால், நாடாளுமன்ற அலுவலக அறையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து நேற்று முறைப்படி ஒப்படைத்தார்.
ஆனால், இந்த அறிக்கைக்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். குறைவான காலக்கெடுவில் குழுவின் அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்ய முடியாத நிலையில் இந்த அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வக்பு சட்டத் திருத்த மசோதா இறுதி திருத்த அறிக்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தெடாரில் அந்த மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா வக்பு சொத்துகளை கையாளுவதில் பொறுப்புடைமை, வெளிப்படைத் தன்மை மற்றும் நவீனத்துவத்தை கொண்டு வரும் என்று பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இது முஸ்லிம் சமூகத்தின் அரசியலமைப்பு உரிமைகள் மீதான தாக்குதல் என்றும், வக்பு வரிய செயல்பாட்டில் தலையிடுவதாகவும் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment