Published : 30 Jan 2025 03:44 PM
Last Updated : 30 Jan 2025 03:44 PM

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம்

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டம் நாடாளுமன்றத்தின் இணைப்புக் கட்டிடத்தில் இன்று நடந்தது.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, ஜெ.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் எல்.முருகன் ஆகியோரின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், கே.சுரேஷ் மற்றும் கவுரவ் கோகய், திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.பி.க்கள் சுதிப் பந்தியோபாதியா மற்றும் டெரிக் ஒ பிரைன், ஆர்எஸ்பி எம்.பி. பிரேமச்சந்திரன், பிடிஜே எம்.பி. சஸ்மித் பத்ரா, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராம் கோபால் யாதவ், ஜேம்எம் எம்.பி. மஹுவா மஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆர்எஸ்பி எம்.பி.என்.கே.பிரேமச்சந்திரன், "பட்ஜெட் கூட்டத் தொடர் நாளைத் தொடங்குகிறது. அதற்கு முன்பு வழக்கமாக நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டம்தான் இது. அரசு ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. ஆனால், அரசு அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (ஜன.31) தேதி தொடங்கி திட்டமிட்டபடி ஏப்ரல் 4-ம் தேதி நிறைவடைய இருக்கிறது. நாளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். நாளை மறுநாள் பிப்.1-ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பிப்ரவர் 14 முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இடைக்கால விடுப்பு அளிக்கப்படுகிறது. பின்பு இரு அவைகளும் மார்ச் 10-ல் மீண்டும் கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x