Published : 28 Jan 2025 05:13 AM
Last Updated : 28 Jan 2025 05:13 AM
புதுடெல்லி: வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆளும் கட்சி உறுப்பினர்களின் 14 திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, வக்பு (திருத்த) மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிகளைச் சேர்ந்த 16 எம்.பி.க்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு 30 தடவைக்கு மேல் கூடி இந்த மசோதா குறித்து விவாதித்தது. அப்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நவம்பர் 29-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. பின்னர் இந்த காலக்கெடு பிப்ரவரி 13 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கடைசி கூட்டத்தில் வக்பு திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு பின்னர் ஜேபிசி தலைவர் ஜெகதாம்பிகா பால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வக்பு சட்டத்தில் மொத்தம் 44 திருத்தங்களை செய்ய புதிய மசோதா வகை செய்கிறது. இதுகுறித்து கடந்த 6 மாதங்களுக்கு மேலாக விரிவான ஆலோசனை நடைபெற்றது. அப்போது இந்த 44 திருத்தங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்து. இவை அனைத்திலும் திருத்தம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் வாக்கெடுப்பில் இந்த கோரிக்கை தோல்வி அடைந்தது. இதுபோல பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 14 திருத்தங்களில் மட்டும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. எனவே இந்த 14 திருத்தங்கள் மட்டுமே பெரும்பான்மை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, வரைவு மசோதா 28-ம் தேதி (இன்று) வெளியிடப்படும். 29-ம் தேதி 14 திருத்தங்களை ஏற்பதை உறுதி செய்ய வாக்கெடுப்பு நடைபெறும். 31-ம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஜேபிசி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment