Published : 28 Jan 2025 04:53 AM
Last Updated : 28 Jan 2025 04:53 AM

50 வயதுக்கு மேல் சாதனை படைத்த 50 பேர்: போர்ப்ஸ் பட்டியலில் 3 இந்திய பெண்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த பிரபல வணிக இதழான போர்ப்ஸ், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, அறிவியல், அரசியல், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களின் பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் உலகம் முழுவதும் ஐம்பது வயதுக்கு மேல் சாதனை படைத்த 50 பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் அண்மையில் வெளியிட்டது. இதில் ஊர்மிளா, கிரண் மஜும்தார் ஷா, ஷீலா படேல் ஆகிய 3 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

குஜராத்தை பூர்வீகமாக கொண்ட ஊர்மிளா மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் வசிக்கிறார். தற்போது அவருக்கு 80 வயதாகிறது. இந்த வயதிலும் பல்வேறு சமையல் போட்டிகளில் பங்கேற்று விருதுகளை குவித்து வருகிறார்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பயோகான் நிறுவனத்தின் தலைவராக கிரண் மஜும்தார் ஷா (71) உள்ளார். நாட்டின் மிகச் சிறந்த பெண் தொழில் முனைவோரில் ஒருவராக அவர் போற்றப்படுகிறார்.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலரான ஷீலா படேல் (72), கடந்த 1984-ம் ஆண்டில் தன்னார்வ தொண்டு அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு மூலம் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை அவர் மேம்படுத்தி வருகிறார். ஷீலா படேலின் முயற்சியால் ஏழை குடும்பங்களுக்காக 11 அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் சுமார் 33-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஷீலா படேலின் தன்னார்வ தொண்டு அமைப்பு சேவையாற்றி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x