Published : 22 Jan 2025 05:43 AM
Last Updated : 22 Jan 2025 05:43 AM

சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவர் நதியில் நீந்தி இந்தியாவுக்குள் ஊடுருவினார்: மும்பை போலீஸார் தகவல்

நடிகர் சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்திய ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் வங்கதேசத்தில் இருந்து நதியை நீந்தி கடந்து இந்தியாவின் மிசோரம் மாநிலத்துக்குள் ஊடுருவி உள்ளார் என்று மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15-ம் தேதி இரவு மும்பையில் உள்ள நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள் மர்ம நபர் புகுந்தார். அந்த நபர், நடிகர் சயீபை கத்தியால் பலமுறை குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். கடந்த 19-ம் தேதி மகாராஷ்டிராவின் தானே பகுதியில் மர்ம நபர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து மும்பை போலீஸார் கூறியதாவது: நடிகர் சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவர் வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் (30) என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவர் 12-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். குத்து சண்டை வீரரான இவர், வங்கதேசத்தில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வங்கதேசத்தில் இருந்து டவுகி நதியை நீந்தி கடந்து இந்தியாவின் மிசோரம் மாநிலத்துக்குள் நுழைந்துள்ளார்.

மிசோரமில் இருந்து மேற்குவங்கத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஜஹாங்கீர் ஷேக் என்பவரின் ஆதார் எண்ணை சமர்ப்பித்து சிம் கார்டு வாங்கி உள்ளார். தனது பெயரை விஜய் தாஸ் என்று மாற்றி உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி மும்பை வந்துள்ளார். பின்னர் மகாராஷ்டிராவின் தானே பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரரிடம் தொழிலாளியாக பணியில் சேர்ந்துள்ளார்.

கடந்த 15-ம் தேதி நள்ளிரவு நடிகர் சயீப் அலிகான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் நுழைந்துள்ளார். 8 மாடிகள் வரை படிக்கட்டு வழியாக ஏறி உள்ளார். பின்னர் குழாய் வழியாக 12-வது மாடிக்கு ஏறி உள்ளார். அங்கு சயீப் அலிகான் வீட்டின் கழிவறை ஜன்னலை உடைத்து அவரது வீட்டுக்குள் புகுந்துள்ளார்.

அங்கு நகை, பணத்தை திருட ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் முயற்சி செய்துள்ளார். எதுவும் கிடைக்காத நிலையில் அதிகாலை 2 மணி அளவில் சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். குத்துச்சண்டை வீரர் என்பதால் சயீபை எளிதாக வீழ்த்தி உள்ளார். சுமார் 2 மணி நேரம் அடுக்குமாடி குடியிருப்பின் தோட்டத்தில் பதுங்கி இருந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

குழாய் வழியாக ஏறி வரும்போது வேறு ஒரு நடிகரின் வீட்டின் கழிப்பறை கண்ணாடியை உடைக்க ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் முயற்சி செய்துள்ளார். அந்த வீட்டில் நாய் குரைத்ததால் அங்கிருந்து தப்பி நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக அமித் பாண்டே என்ற கட்டிட ஒப்பந்தகாரரிடம் ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் பணியாற்றி வந்துள்ளார். அந்த ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர்களை பணியில் அமர்த்தும்போது அவர்களின் முழுமையான பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும் என்று கட்டிட ஒப்பந்ததாரர்களிடம் கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x