Published : 17 Jan 2025 02:04 AM
Last Updated : 17 Jan 2025 02:04 AM
புதுடெல்லி: டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் ரூ.500-க்கு காஸ் சிலிண்டர், வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவையில் 70 இடங்கள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் இண்டியா கூட்டணியில் அங்கமாக இருக்கும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. அதனால் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் - பாஜக ஆகிய 3 கட்சிகளின் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகளாக இந்த கட்சிகள் இலவச திட்டங்களை அறிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று 2 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உட்பட முக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டனர்.
அதில், டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரூ.500-க்கு காஸ் சிலிண்டர் வழங்கப்படும். வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் ஆகிய 2 வாக்குறுதிகளை வழங்கினர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் ‘பணவீக்க நிவாரண திட்டம்’ செயல்படுத்தப்படும். அதில் ரூ.500-க்கு காஸ் சிலிண்டர், ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச உணவு தானிய ‘கிட்’ வழங்கப்படும். இரண்டாவதாக இலவச மின்சார திட்டத்தின் கீழ் 300 யூனிட் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment