Published : 14 Jan 2025 06:03 PM
Last Updated : 14 Jan 2025 06:03 PM

‘இண்டியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கானது’ - சிவசேனாவின் கருத்துக்கு சரத் பவார் ஆதரவு!

சரத் பவார் | கோப்புப்படம்

மும்பை: இண்டியா கூட்டணி என்பது மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு, மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்ற ஊகத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) கட்சியின் தலைவர் சரத் பவார் கூறுகையில், “இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டது தேசிய பிரச்சினை மற்றும் மக்களவைத் தேர்தலை முன்வைத்து அமைந்திருந்தது. மாநிலத் தேர்தல்கள் உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை.

மகாராஷ்டிராவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்தனியாக போட்டியிடுவதா என்று இன்னும் சில நாட்களில் அனைவருடனும் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். கூட்டணிக்குள் நாங்கள் ஒவ்வொருவருடனும் தொடர்பில் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

டெல்லி தேர்தல் குறித்து கூறுகையில், டெல்லி பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை நாம் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவளிக்க வேண்டம் என்பதே எனது கருத்து என்றார்.

இண்டியா கூட்டணி குறித்து அதில் அங்கம் வகிக்கும் மூத்த தலைவர் சரத் பவாரின் இந்தக் கருத்து, எம்விஏவில் அங்கம் வகிக்கும் உத்தவ் அணி சிவசேனா, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்த சில நாட்களுக்கு பின்பு வந்துள்ளது. கடந்த 1970-களில் இருந்து பிஎம்சி-யை (பிரிக்கப்படாதது) சிவசேனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

மகாராஷ்டிரா பேரவைத் தேர்தலில் மகா விகாஸ் அகாடி தோல்வியடைந்ததை அடுத்து பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போதைய இந்த போக்கு கூட்டணியின் ஒற்றுமை குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை சாத்தியமாக்கிய கூட்டணி பேரவைத் தேர்தலில தோல்வியைச் சந்தித்தது. கூட்டணியில் காங்கிரஸ் 16, சிவசேனா (உத்தவ் அணி) 20, என்சிபி (சரத் பவார்) 10 என மொத்தம் 46 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. பேரவைத் தேர்தல் முடிவுகள் உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்கும் முடிவெடுக்க சிவசேனா தலைவர்களைத் தூண்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x