Published : 13 Jan 2025 10:50 AM
Last Updated : 13 Jan 2025 10:50 AM

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராட திரண்ட பக்தர்கள்!

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று தொடங்கியுள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர்.

12 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பமேளா விழா உலகின் மிகப்பெரிய மத திருவிழா ஆகும். பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 45 கோடி பேர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பவுர்ணமி என்பதால் கங்கை, யமுனை, சரஸ்வதி நிதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் புனித நீராட அதிகளவில் திரண்டுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், சாதுக்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இந்த பங்கேற்கும் வகையில் அங்கு முகாமிட்டுள்ளனர். நாளை மகர சங்கராந்தி என்பதால் இந்த நிகழ்வின் முதல் அமிர்த கால நீராடல் நடைபெற உள்ளது. திரிவேணி சங்கமத்தில் நீராடுவது பாக்கியம் என்றும், பகவான் ராமர் கூட இங்கு வந்து நீராடி உள்ளதாக ஐதீகம் சொல்கிறது என பண்டிதர் பவன் குமார் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி? முன்னதாக, உத்தரபிரதேச முதல் யோகி ஆதித்யநாத் வழங்கிய உத்தரவின் படி பிரயாக்ராஜ் நகரில் உள்ள கோயில்கள், அகாராக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை தலைவர் (டிஜிபி) பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜ் நகரை இணைக்கும் 7 முக்கிய வழித்தடங்களில் 102 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக வரும் வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கண்காணிப்பை பலப்படுத்துவதற்காக, 5 வஜ்ரா வாகனங்கள், 10 ட்ரோன்கள் மற்றும் சதித் திட்டங்களை முறியடிக்கும் 4 குழுக்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நீருக்கடியில் செயல்படும் 113 ட்ரோன்கள், 2,700 செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள் உட்பட நவீன தொழில்நுட்பங்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாநில போலீஸாருடன் தேசிய பாதுகாப்புப் படையினர் (என்எஸ்ஜி), தீவிரவாத தடுப்புப் படையினர் (ஏடிஎஸ்) உள்ளிட்டோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜனவரி 14 (மகர சங்கராந்தி), 29 (மவுனி அமாவாசை) மற்றும் பிப்ரவரி 3 (வசந்த பஞ்சமி) ஆகிய 3 தினங்கள் புனித நீராடலுக்கான சிறப்பு தினங்கள் ஆகும். இந்த நாட்களில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x