

கேரளாவை மினி பாகிஸ்தான் என்று கூறிய மகாராஷ்டிர அமைச்சர் நிதிஷ் ராணேவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நிதிஷ் ராணே அண்மையில் பேசும்போது, "கேரளாவில் இந்துக்களின் மக்கள்தொகை குறைந்து கொண்டே வருகிறது. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இந்து பெண்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் குறிவைக்கப்படுகின்றனர். பாகிஸ்தானில் இந்துக்கள் நடத்தப்படுவதை போலதான் கேரளாவிலும் நடத்தப்படுகின்றனர்.
தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து ஆதரவு கிடைப்பதால்தான் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
கேரளா என்பது ஒரு மினி பாகிஸ்தான் போன்றது. அதனால்தான் ராகுல் காந்தியும், பிரியங்காவும் அங்கு வெற்றி பெற்றனர். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் அனைவரும் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நிதிஷ் ராணேவின் பேச்சுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியதாவது: மகாராஷ்டிர மாநில அமைச்சர் நிதிஷ் ராணே, கேரளாவை மினி பாகிஸ்தான் என அழைத்திருப்பது மிகவும் தீங்கிழைக்கக் கூடியது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கத்தின் கோட்டையாக விளங்கும் கேரளாவுக்கு எதிராக சங் பரிவாரத்தால் நடத்தப்படும் வெறுப்பு பிரச்சாரங்களை இதுபோன்ற சொல்லாட்சிகள் பிரதிபலிக்கின்றன.
கேரளா மீதான இந்த கொடூரமான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், மேலும், சங் பரிவாரின் வெறுப்பு பிரச்சாரத்துக்கு எதிராக அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார்.