Published : 20 Nov 2024 03:02 AM
Last Updated : 20 Nov 2024 03:02 AM
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று 2-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 13-ம் தேதி முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக இன்று 38 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் மொத்தம் 1.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
15 தொகுதிகளில் இடைத்தேர்தல்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. முதல்கட்டமாக கடந்த 13-ம் தேதி கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 15 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் மகாராஷ்டிராவின் நான்டெட் மக்களவைத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அதிகபட்சமாக உத்தர பிரதே சத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் ஆளும் பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வரும் 2027-ம் ஆண்டில் உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக இடைத்தேர்தல் முன்னிறுத்தப்படுவதால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதேபோல 48 சட்டப்பேரவைத் தொகுதிகள், வயநாடு, நான்டெட் மக்களவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் வரும் 23-ம் தேதி நடை பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment