Published : 08 Nov 2024 10:11 AM
Last Updated : 08 Nov 2024 10:11 AM
மும்பை: இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல். சல்மான் கான் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆகிய இருவரையும் தொடர்புப்படுத்தி வெளியாகி உள்ள பாடலால் இம்முறை மிரட்டல் வந்துள்ளது.
வியாழன் (நவ.7) அன்று மும்பை போக்குவரத்து காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், மிரட்டல் விடுத்துள்ளது. சல்மான் கான் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் என இருவரையும் தொடர்புப்படுத்தி உருவாகியுள்ள பாடலைக் குறிப்பிட்டு, அந்த பாடலாசிரியர் இதற்கான பின்விளைவுகளை ஒரு மாத காலத்துக்குள் எதிர்கொள்வார் என மிரட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இனி அந்த பாடலாசிரியர் பாடலே எழுத முடியாது. சல்மான் கானுக்கு தைரியம் இருந்தால் அவரை பாதுகாக்க சொல்லுங்கள் பார்ப்போம்’ என மிரட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1998-ல் மானை வேட்டையாடிய விவகாரத்தில் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், பணம் தர வேண்டும் போன்ற நிபந்தனைகளையும் அவ்வப்போது அந்த கும்பல் வைப்பது உண்டு.
இதற்கிடையே நடிகர் ஷாருக்கானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை - பாந்த்ரா போலீஸாரை தொடர்பு கொண்டு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த தொலைபேசி எண் ராய்ப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் ஃபைசன் கான் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தனது போன் நவம்பர் 2-ம் தேதி தொலைந்து போனதாக தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் உள்ள சதியை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment