Published : 29 Oct 2024 01:28 AM
Last Updated : 29 Oct 2024 01:28 AM

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல்: பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் சபாநாயகர் நர்வேகர், துணை முதல்வர் பட்னாவிஸ்

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் சபாநாயகர் ராகுல் நர்வேகர், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மொத்தம் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் இத்தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் மலபார் ஹில்ஸ் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மங்கள் பிரபாத் லோதா ரூ.447 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து ஓவாலா மஜிவாடா தொகுதியில் போட்டியிடும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) வேட்பாளர் பிரதாப் சர்னைக் ரூ.333 கோடி சொத்துகளுடன் இரண்டாமிடத்திலும் கொலாபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் சபாநாயகர் ராகுல் நர்வேகர் சுமார் ரூ.130 கோடி சொத்துகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். தென்மேற்கு நாக்பூரில் 6-வது முறையாக போட்டியிடும் அவர் தனக்கு ரூ.13.27 கோடி சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவும் இந்தப் பட்டியலில் உள்ளார். மும்பை வோர்லி தொகுதியில் போட்டியிடும் அவர் தனக்கு ரூ.21.47 கோடி சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 தேர்தலில் ஆதித்ய தாக்கரே தனக்கு ரூ.17.69 சொத்துகள் உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு தற்போது சுமார் ரூ.4 கோடி உயர்ந்துள்ளது.

ஆதித்ய தாக்கரே கடந்த 2019 தேர்தலுக்கு மாறாக இம்முறை தன் மீது குற்ற வழக்கு உள்ளதாக கூறியுள்ளார். லோயர் பரோல் பகுதியில் சாலைப் பாலம் ஒன்றை சட்டவிரோதமாக திறந்து வைத்ததாக அவர் மீது எம்.என்.ஜோஷி சாலை காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x