Published : 25 Oct 2024 12:34 PM
Last Updated : 25 Oct 2024 12:34 PM

லடாக்கில் முன்னேற்றம் | இந்திய - சீன எல்லையின் 2 பகுதிகளில் படைகளை விலக்கும் பணி தொடக்கம்

கோப்புப் படம்

புதுடெல்லி: லடாக்கின் டெம்சோக், செப்சாங் ஆகிய 2 பகுதிகளில் படைகளை விலக்கும் பணியை சீனாவும் இந்தியாவும் தொடங்கி உள்ளன.

லடாக்கில் உள்ள உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் இரண்டு சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இந்திய, சீனப் படைகள் வெளியேற தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளனர். ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்லெண்ண முயற்சியின் ஒரு பகுதியாக இந்த 2 நிலைகளில் இருந்தும் ராணுவ உபகரணங்கள் திரும்பப் பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் பேட்ரோல் பாய்ண்ட் 14ல் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. பல மணி நேரம் நீடித்த இந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்தியாகம் செய்தனர். சீன தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். எனினும், அது குறித்த தகவலை அந்த நாடு மறைத்துவிட்டது. இந்த மோதலை அடுத்து இந்தியா தனது ராணுவத்தை அங்கே குவித்தது. பதிலுக்கு சீனாவும் தனது ராணுவத்தை குவித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் இரு நாடுகளின் தூதரக உறவையும் கடுமையாக பாதித்தது. இரு தரப்பிலும் வார்த்தைப் போர் நடந்தது. இந்திய - சீன தலைவர்களின் சந்திப்பும் தவிர்க்கப்பட்டது. எனினும், காலப் போக்கில் இரு தரப்பிலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் இருதரப்பு உறவை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது.

இந்த சந்திப்புக்கு முன்னதாக, லடாக்கின் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் இரு தரப்பினரும் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது மற்றும் துருப்புகளை வெளியேற்றுவது என கடந்த திங்கள்கிழமை ஒப்பந்தம் எட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், படைகளை விலக்கிக்கொள்ளும் பணி இன்று தொடங்கியது.

லடாக்கின் செம்சோக், செப்சாங் ஆகிய 2 பகுதிகளில் படைகளை விலக்கிக்கொள்ளும் பணி இன்று தொடங்கியதாகவும், ராணுவ உபகரணங்களும் விலக்கிக்கொள்ளப்படுவதாகவும் ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 4 ஆண்டு கால எல்லை மோதலில் ஒரு முக்கிய முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x