Published : 25 Oct 2024 01:33 AM
Last Updated : 25 Oct 2024 01:33 AM

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு: ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் படுகாயம்

ஜம்மு: ஜம்மு- காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் புதிய அரசு பதவியேற்று உள்ளது. இந்த சூழலில் காஷ்மீரில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு நேற்று உணவு தானியங்கள் கொண்டு செல்லப்பட்டன. ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உணவு வகைகளை வாகனத்தில் எடுத்து சென்றனர். அவர்களின் பாதுகாப்புக்காக 3 ராணுவ வீரர்களும் உடன் சென்றனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 2 சுமை தூக்கும் தொழிலாளிகள் மற்றும் 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். வெளிமாநில தொழிலாளி கொலை காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் நேற்று காலை வெளிமாநில தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார். முதல்கட்ட விசாரணையில் மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேற்குவங்கத்தை சேர்ந்த அவர் கடந்த சில மாதங்களாக ஸ்ரீநகரில் பணியாற்றி வந்தார். கடந்த 20-ம் தேதி காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x