Published : 24 Oct 2024 09:03 PM
Last Updated : 24 Oct 2024 09:03 PM

மெட்ரோ நகரங்களை இணைக்கும் வகையில் அமராவதியில் ரூ.2,245 கோடியில் புதிய ரயில் பாதை: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

அமராவதி: ஆந்திர மாநில தலைநகர் அமராவதிக்கு ரூ.2,245 கோடி செலவில் 57 கி.மீ தொலைவிற்கு புதிய ரயில்வே பாதை அமைக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். இதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று டெல்லியில் மாலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது: “ஆந்திர தலைநகர் அமராவதிக்கு 57 கி.மீ தூரம் வரை புதிய ரயில்வே பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த திட்டம் ரூ.2,245 கோடி செலவில் அமைக்கப்படும். ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை உட்பட நாட்டில் உள்ள முக்கிய தலைநகரங்களை அமராவதியுடன் இணைக்கும் விதத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நதியின் மீது 3.2 கி.மீ தூரத்திற்கு ரயில்வே மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது. இது ஆந்திராவில் உள்ள எர்ருபாளையம் - நம்பூரு இடையே அமையும். இந்த புதிய ரயில்வே பாதை அமைப்பதின் மூலம் தெற்கு, மத்திய மற்றும் வட இந்திய மாநிலங்களையும் நாம் இணைக்க முடியும்.

அமராவதி நினைவு தூண், உண்டவல்லி குகைகள், அமரேஸ்வர லிங்க சுவாமி திருக்கோயில், தியான புத்தர் திட்டம் போன்றவற்றை காண செல்வோருக்கு இப்பாதை எளிமையானது. மசூலிப்பட்டினம், கிருஷ்ணப்பட்டினம் மற்றும் காக்கிநாடா ஆகிய ஆந்திர துறைமுகங்களையும் இந்த ரயில்வே பாதை இணைக்கும். பீகாரிலும் ரூ.4553 கோடி செலவில் ரயில்வே திட்டங்களை நிறைவேற்றவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

சர்கத்தியா கஞ்ச் - ரஸ்கல் - சீதாமட்டி - தர்பாங்கா பணிகள் மற்றும் சீதாமட்டி - முஜ்ஜுஃபர் பூர் இடையே இரட்டை வழித்தடம் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். மொத்தம் 256 கி.மீ தூரம் உள்ள இந்த திட்டத்தால், உத்தர பிரதேசம் மற்றும் வட பீகார் மாநில மக்கள் பயன் அடைவர். ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இப்பணிகள் 4 ஆண்டுகளுக்குள் நிறைவடையும்” என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.

சந்திரபாபு நாயுடு நன்றி: மத்திய அமைச்சகம் ஆந்திராவின் தலைநகரான அமராவதியை பிற முக்கிய தலைநகர் ரயில்வே பாதையில் இணைக்கும் திட்டத்தை அறிவித்தமைக்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சந்திரபாபு அமராவதியில் பேசுகையில், “அமராவதிக்கு புதிய ரயில்வே பாதையை அமைக்க உறுதுணையாக உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரயில்வே துறை அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவிற்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் அமராவதி பிற மாநிலங்களுடன் இணைய உள்ளது. இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இதே போல், விசாகப்பட்டினம் ரயில்வே வட்ட திட்டம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன் என கூறினார். இத்திட்டத்திற்கு துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி உள்ளிட்டோரும் பிரதமருக்கு நன்றியினை தெரிவித்து கொண்டுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ. 252 கோடி நிதி ஒதுக்கீடு: இந்நிலையில், ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக ரூ.252.42 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஸ்ரீகாகுளம் ரணஸ்தலம் பகுதியில் இருந்து 6 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமூக வலைத்தளம் மூலம் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x