Published : 24 Oct 2024 04:43 AM
Last Updated : 24 Oct 2024 04:43 AM

ஒடிசா அருகே நாளை கரை கடக்கிறது டானா புயல்: தயார் நிலையில் மீட்பு படை; 150-க்கும் மேற்பட்ட ரயில் ரத்து

புதுடெல்லி: வங்கக் கடலில் உருவான டானா புயல் ஒடிசா - மேற்கு வங்கம் இடையே நாளை அதிகாலை கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தம் டானா புயலாக தீவிரமடைந்துள்ளது. இது நேற்று ஒடிசாவுக்கு தென் கிழக்கே 560 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் தென்கிழக்கு பகுதியில் 630 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

120 கி.மீ. வேகத்தில் காற்று: டானா புயல் மேலும் வலுவடைந்து ஒடிசாவின் புரி மற்றும் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு இடையே நாளை அதிகாலை கரைகடக்கும் எனத் தெரிகிறது. அப்போது மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும், கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர பகுதியில் மீனவர்கள் யாரும் நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டானா புயல் காரணமாக நேற்று முதல் நாளை வரை 150-க்கும் மேற்பட்ட ரயில்களை தென் கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. புயலை முன்னிட்டு இந்திய கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிக்கு கப்பல்கள், விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டானா புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் தெற்கு 24 பர்கனாஸ், பஸ்சிம், புர்பா மெதினிபூர், ஜார்கிரம், கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஒடிசாவில் பாலசூர், பத்ரக், கேந்திரபாரா, மயூர்பன்ஜ், ஜகத்சிங்பூர் மற்றும் புரி ஆகிய இடங்களில் கன மழை பெய்யும். புயல் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படையைச் (என்டிஆர்எப்) சேர்ந்த 13 குழுக்கள் விமானப் படை விமானங்கள் மூலம் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x