Published : 23 Oct 2024 02:43 PM
Last Updated : 23 Oct 2024 02:43 PM

“முதல் முறையாக எனக்காக ஆதரவு கேட்கிறேன்!” - வயநாட்டில் பிரியங்கா காந்தி வாக்கு சேகரிப்பு

வயநாடு: “பல தேர்தல்களில் கட்சிக்காக கடந்த 35 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறேன். ஆனால், எனக்காக உங்களிடம் ஆதரவு கேட்பது இதுவே முதல் முறை" என்று வயநாட்டில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசினார்.

வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது வேட்பு மனுவை இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு முன்பு முற்பகல் 11.45-க்கு நடந்த பேரணியில் அவர் கலந்து கொண்டார். இதில் பிரியங்காவுடன் அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரணிக்கு பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரிங்கா, "எனக்கு 17 வயது இருக்கும்போது, 1989-ம் ஆண்டு எனது தந்தைக்காக (முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி) முதல் முறையாக பிரச்சாரம் செய்தேன். இப்போது 35 ஆண்டுகளாகி விட்டது. தொடர்ந்து பல தேர்தல்களில் எனது தாய், சகோதரர் மற்றும் சக காங்கிரஸ்காரர்களுக்காக பிரச்சாரம் செய்திருக்கிறேன். ஆனால், முதல் முறையாக எனக்காக நான் பிரச்சாரம் செய்கிறேன். யுடிஎஃப் வேட்பாளராக எனக்கு இந்த வாய்ப்பை அளித்தற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், வயநாடு வேட்பாளராக எனக்கு ஆதரவு அளித்ததற்காக எனது குடும்பத்தினருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு நிகழ்ந்த பேரழிவை நான் நேரில் பார்த்தேன். தனது குடும்பத்தை இழந்த குழந்தைகளைப் பார்த்தேன். தனது குழந்தைகளை இழந்த தாய்மார்களைச் சந்தித்தேன். ஒட்டுமொத்த வாழ்வையும் இழந்தவர்களையும் சந்திதேன். நான் சந்தித்த ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தனர். அவர்கள் துணிச்சலுடன் எதிர்பார்ப்புகளின்றி உளபூர்வமாக உதவி செய்தனர். எனக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு அளித்தால் உங்களின் பிரதிநிதியாக இருப்பது எனக்கு கவுரவமாகும்" என்று அவர் பேசினார்.

முன்னதாக, 2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலி என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றதால் ஏதேனும் ஒரு தொகுதியை அவர் கைவிட வேண்டிய சூழல் உருவானது. இந்நிலையில்தான், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 17 அன்று ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து காங்கிரஸ் எதிர்பார்க்கப்பட்டது போலவே பிரியங்காவை வேட்பாளராக அறிவித்தது. பிரியங்கா காந்தியின் தேர்தல் அரசியல் பிரவேசம் இது. அதனாலேயே வயநாடு மீண்டும் ஒரு நட்சத்திர தொகுதியாக கவனம் பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x