Published : 20 Oct 2024 10:11 AM
Last Updated : 20 Oct 2024 10:11 AM

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு காங்கிரஸ், ஜேஎம்எம் கட்சிக்கு ஆர்ஜேடி கண்டனம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் நவம்பர் 13-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது அங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஜேஎம்எம், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) என இண்டியா கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக அம்மாநிலத்தின் இண்டியா கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 81 இடங்களில் ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் போட்டியிடும் என்றும் மீதமுள்ள 11 இடங்கள் ஆர்ஜேடி மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார். இதற்கு ஆர்ஜேடி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் மனோஜ் குமார் கூறுகையில், “எங்களால் 15 முதல் 18 தொகுதிகளில் எந்த உதவியும் இல்லாமல் பாஜகவை வெல்ல முடியும். ஆனால், ஜேஎம்எம், காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீடு குறித்து எங்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. 2 நிமிட நூடுல்ஸ் போல் எல்லா முடிவுகளையும் எடுத்துவிட முடியாது” என்று விமர்சித்தார்.

காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது கூறுகையில், “கூட்டணி கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து வேட்பாளர் தேர்வு குறித்து கலந்தாலோசனையில் ஈடுபட்டன. வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு அடிப்படையில் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடரபாக யாரிடமும் எந்த அதிருப்தியும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x