Published : 18 Oct 2024 04:48 AM
Last Updated : 18 Oct 2024 04:48 AM

பிஹாரில் கள்ள சாராயம் குடித்த 25 பேர் உயிரிழப்பு: நிதிஷ் குமார் அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்

பாட்னா: பிஹாரில் கள்ளச் சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 25 ஆக உயர்ந்தது. இதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்தார்.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். பிஹார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனாலும், அடிக்கடி கள்ளச்சாராயம் குடித்துஉயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கிறது. இந்நிலையில் சிவான் மாவட்டம், பகவான்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மதர் கிராமத்தை சேர்ந்த பலர் கடந்த செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை குடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவர்களுக்கு தலைவலி, பார்வை இழப்பு, வாந்தி, வயிற்று வலி ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அவர்கள் சிவானில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுபோல் சரண் மாவட்டம் இப்ராஹிம்பூர் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த பலர், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இவ்விரு சம்பவங்களிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 25 ஆக உயர்ந்தது.

இதுகுறித்து காவல்துறை இயக்குநர் அலோக் ராஜ் கூறுகையில், “சரண் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்திற்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் இரு சம்பவங்களிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 12 பேரை கைது செய்துள்ளோம்” என்றார்.

சரண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குமார் ஆசிஷ் கூறுகையில், “சாராயத்தில் தொழிற்சாலை ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. இந்த ரசாயனம் அவர்களுக்குஎப்படி கிடைத்தது என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாகஅந்தப் பகுதி ரோந்து போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

ரூ.4 லட்சம் நிதியுதவி: காவல் நிலைய போலீஸாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களின் பதில் திருப்தியாக இல்லாவிடில் அவர்கள் மீதும்நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புபுலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. சரண் மாவட்டத்தில் 250 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, 1,650 லிட்டம் சாராயம் அழிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் அதன் அடிப்படையில் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சரண் மாவட்ட ஆட்சியர் அமன் சமீர் கூறினார். பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த சம்பவங்கள் தொடர்பாக உயர்நிலை ஆய்வு நடத்தினார். மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை செயலாளரை சம்பவ இடங்களுக்கு சென்று முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

பிரியங்கா கண்டனம்: பிஹார் கள்ளச் சாராய மரணம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிஹாரில் மதுவிலக்கு அமலில் இருந்தாலும், சட்டவிரோத மதுபான விற்பனை முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனால் தினமும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x