Published : 11 Oct 2024 05:35 AM
Last Updated : 11 Oct 2024 05:35 AM

சட்டப் பேரவைத் தலைவராக தேர்வு: காஷ்மீர் முதல்வராகிறார் உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் (ஜேகேஎன்சி) சட்டப் பேரவைக் குழு தலைவராக உமர்அப்துல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்வராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கடந்த 2019-ல் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த அரசியலமைப்பு சட்டத்தின் 370—வது சிறப்புப் பிரிவு நீக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1-ம் தேதிகளில் 3 கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 8-ம் தேதிவெளியான முடிவுகளில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 29 இடங்களிலும் பிற கட்சிகள் 6தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக உமர் அப்துல்லாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் விரைவில் ஜம்மு-காஷ்மீர் முதல்வராக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சியின் தேசியத் தலைவர் பரூக் அப்துல்லா வீட்டில் நடைபெற்றது.

4 சுயேச்சைகள் ஆதரவு: கூட்டத்துக்குப் பின்னர் பரூக் அப்துல்லா கூறும்போது, “எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பேரவைக் குழுத் தலைவராக உமர் அப்துல்லாக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். நாளை கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. விரைவில் ஜம்மு-காஷ்மீர் முதல்வராக உமர் பதவியேற்பார்” என்றார்.

இந்நிலையில், சுயேச்சை எம்எல்ஏக்களான பியாரே லால் சர்மா, சதீஷ் ஷர்மா, சவுத்ரி முகமது அக்ரம், டாக்டர் ராமேஷ்வர் சிங் ஆகிய 4 பேரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல் லாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் தேசிய மாநாட்டு கட்சியின் பலம் 46-ஆக உயர்ந்துள்ளது. இதன்முலம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் தனியாகவே ஆட்சி அமைக்கத் தேவையான சட்டப் பேரவை உறுப்பினர்களை தேசிய மாநாட்டு கட்சி பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x