Published : 10 Oct 2024 06:54 PM
Last Updated : 10 Oct 2024 06:54 PM

அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம்: ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

மும்பை: தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல், மும்பை வோர்லி மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

டாடா குழுமத்தின் தலைவராக இருந்த 86 வயதான ரத்தன் டாடா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் புதன்கிழமை இரவு காலமானார். இதனையடுத்து மும்பையில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. இன்று காலை, அவரது வீட்டில் இருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் தெற்கு மும்பையில் உள்ள என்சிபிஏ எனப்படும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், சிவ சேனா(யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் ரத்தன் டாடாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு இறுதிச் சடங்குக்காக ரத்தன் டாடாவின் உடல் இன்று மாலை வோர்லி மயானத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடாவுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில், அமித் ஷா, பியூஷ் கோயல், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மகாராஷ்டிர அரசு வலியுறுத்தல்: முன்னதாக, தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவை ஒட்டி, மாநிலத்தில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மகாராஷ்டிர அரசு அறிவித்தது. மேலும், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மும்பையில் கூடிய மகாராஷ்டிர அமைச்சரவை, தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.

பிரதமர் மோடி இரங்கல்: ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ரத்தன் டாடா தொலைநோக்குப் பார்வை கொண்ட வணிகத் தலைவர், இரக்கமுள்ள ஆன்மா, அசாதாரண மனிதர். இந்தியாவின் பழமையான, மிகவும் மதிப்புமிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றுக்கு நிலையான தலைமையை அவர் வழங்கினார். அதே நேரத்தில், அவரது பங்களிப்பு அலுவலக அறையைத் தாண்டி வெகுதூரம் சென்றது. அவரது பணிவு, கருணை, நமது சமூகத்தை மேம்படுத்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அவர் பலருக்குத் தாமாகவே நேசமானார்.

ரத்தன் டாடாவின் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, பெரிய கனவுகள் மற்றும் திருப்பித் தருவதில் அவரது ஆர்வம். கல்வி, சுகாதாரம், தூய்மை, விலங்குகள் நலன் போன்றவற்றுக்கான பணிகளில் அவர் முன்னணியில் இருந்தார். ரத்தன் டாடா உடனான எண்ணற்ற தொடர்புகளால் என் மனம் நிரம்பியுள்ளது. நான் குஜராத் முதல்வராக இருந்தபோது அவரை அடிக்கடி சந்திப்பேன். பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வோம். அவரது கண்ணோட்டங்கள் எனக்கு மிகவும் செழுமையாக இருந்தன. நான் தில்லிக்கு வந்த பிறகும் இந்தக் கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுடன் உள்ளன. ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு: டாடா குழுமத் தலைவராக இருந்து, அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. மும்பையில் புகழும் வளமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன். 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டம், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

1962-ல் டாடா குழுமத்தில் இணைந்தார். 1971-ல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி நிறுவனத்தின் (Nelco) பொறுப்பு இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது ஆலோசனைகளால் நெல்கோ மீண்டது. 1991-ம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். பல புதிய திட்டங்களைப் புகுத்தி நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார். கோரஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது.

பங்குச் சந்தையில் மிக அதிக சந்தை முதலீடு கொண்டதாக டாடா குழுமம் திகழ்கிறது. இவரது வழிகாட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் பொது நிறுவனமானது. நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.

நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு பைக்கில் 4 பேராக கஷ்டப்பட்டுப் போவதைப் பார்க்கும்போதெல்லாம், குறைந்த விலையில் சிறிய கார் தயாரிக்கவேண்டும் என்ற உந்துதல் இவரிடம் ஏற்பட்டது. இந்த கனவு, ‘டாடா இண்டிகா’ வடிவில் 1998-ல் நிஜமானது. உலகிலேயே மலிவாக ரூ.1 லட்சத்துக்கு கார் வெளியிடுவதாக அறிவித்தார். ‘டாடா நானோ’ கார் 2008-ல் உற்பத்தியாகி வந்தபோது அதன் செலவு அதிகரித்துவிட்டது. ஆனாலும், விலையை உயர்த்த மறுத்துவிட்டார்.

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபர் இவர். பிரதமரின் வணிகம் மற்றும் தொழில்கள் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருந்தவர். பல்வேறு வெளிநாட்டு அறக்கட்டளைகளுக்கு அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தவர். பில்கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய எய்ட்ஸ் திட்டக் குழுவிலும் இருந்தவர்.

பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றுள்ளார். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர். 2012 வரை டாடா குழுமத் தலைவராக இருந்த இவர் தற்போது டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தியவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x