Published : 06 Oct 2024 04:37 AM
Last Updated : 06 Oct 2024 04:37 AM

காஷ்மீர், ஹரியானாவில் காங். கூட்டணிக்கு வாய்ப்பு: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு

கோப்புப்படம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. காஷ்மீரில் தேசிய மாநாடு, காங்கிரஸ், தேசிய சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன. இதனால், அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மேலும் இன்ஜினீயர் ரஷீத், காங்கிரஸ் முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட சிறிய கட்சிகள், மக்கள் செல்வாக்குமிக்க சுயேச்சைகள் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். இவர்கள் வாக்குகளை பிரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை நேற்றிரவு வெளியிட்டன.

தைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 20-25, காங்கிரஸ் கூட்டணிக்கு 35-40, மக்கள் ஜனநாயக கட்சிக்கு 4-7, இதர கட்சிகளுக்கு 12-18 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

இண்டியா டுடே - சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 27-32, காங்கிரஸ் - தேசிய மாநாடு கூட்டணிக்கு 40-48 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 23-27 இடங்கள், காங்கிரஸ் - தேசிய மாநாடு கூட்டணிக்கு 46-50 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

ஹரியானாவில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹரியானாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சி 88 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

ஜன்நாயக் ஜனதா, ஆசாத் சமாஜ் (கன்சிராம்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதேபோல இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளன.

ரிபப்ளிக் பாரத் - மேட்ரிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு 55 முதல் 62 இடங்கள், ஆளும் பாஜகவுக்கு 18 முதல் 24 இடங்கள், இதர கட்சிகளுக்கு 2 முதல் 5 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு 44-54, பாஜகவுக்கு 19-29 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு 49-61 இடங்கள், பாஜகவுக்கு 20-32 இடங்கள், இதர கட்சிகளுக்கு 3-5 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 27-35, காங்கிரஸுக்கு 51-61 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

துரூவ் ரிசர்ச் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 22-32, காங்கிரஸுக்கு 50-64, இதர கட்சிகளுக்கு 2-8 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

காஷ்மீர், ஹரியானாவில் தலா 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இரு மாநிலங்களிலும் ஆட்சியமைக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் காஷ்மீர், ஹரியானாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.

முன்னணி இந்தி நாளிதழான தைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில் காஷ்மீரில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த நாளிதழ் செய்தியில், "காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணிக்கு 40 இடங்கள் வரை கிடைக்கக்கூடும். பெரும்பான்மைக்கு 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 7 இடங்கள் வரை கிடைக்கக்கூடும். எனவே மெகபூபா ‘கிங் மேக்கராக' உருவாக வாய்ப்பிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹரியானா தேர்தலில் 65 சதவீத வாக்குப்பதிவு: ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில், நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் 2.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 1,027 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 20,632 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஒரு சில சம்பவங்களைத் தவிர மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

மாலை 6 மணி நேர நிலவரப்படி ஹரியானாவில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x